மலசலத்துக்கும் கோட்டாவிடம் கேட்டு செல்பவரே சலே

 

என்னைத் திட்டமிட்டுக் கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அனைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சுரேஷ் சலேதான்,” என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மதுப் பாட்டிலுக்கும், சோற்றுப் பார்சலுக்கும், வெறும் ஆயிரம் ரூபாய் பணத்திற்கும் ஆசைப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி ராஜபக்ஷாக்களுக்கு இன்னமும் ‘முட்டுக் கொடுத்துக்’ கொண்டிருக்கும் நபர்களைச் சாடிய அவர், தனக்கு நேர்ந்த அரசியல் பழிவாங்கல்களின் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரிகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்துப் பொன்சேகா மேலும் விவரித்துள்ளதாவது:

“எவ்வித முறையான குற்றச்சாட்டுகளோ அல்லது நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் சுமார் 8 மாதங்கள் நான் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

ஜன்னல்களும் கதவுகளும் மரப்பலகைகளால் அடித்துப் பூட்டப்பட்ட ஒரு சிறிய இருட்டறையிலேயே அவர்கள் என்னை அடைத்து வைத்திருந்தனர்.

சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்படுபவர்களின் மனநிலை என்ன, அவர்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது குறித்த முழுமையான தந்திரங்கள் சலேவுக்கு நன்றாகவே தெரியும். சுரேஷ் சலே, கபில ஹெந்தவிதாரண போன்றவர்களின் பழிவாங்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே, கோட்டாபய ராஜபக்ஷ எங்களைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தினார்.”

இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகள் தன் மீது மட்டுமன்றி, தனது குடும்பத்தினர் மீதும் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகக் கவலை வெளியிட்டுள்ள அவர்; தான் கைது செய்யப்பட்ட தினத்தன்று, தனது மனைவியைக் விடியற்காலை 4 மணி வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.