மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைனை தொடர்ந்து தற்பொழுது ஜோர்டானிலும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் விமான படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஈரான் ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை ஏவி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதால் ஜோர்டானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் ஈரானின் தலைநகரான டெஹ்ரானை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாகவே இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையை ஈரான் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் மோதல் போக்கு, தற்பொழுது அண்டை நாடுகளிலும் அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களாக வெடித்துள்ளன. அடுத்தடுத்து குவைத், பஹ்ரைன், மற்றும் ஜோர்டான் எனப் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை ஈரான் குறிவைத்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.




