உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் அதிகரிப்பு

 

பதினைந்து வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரில் உடற்பருமன் பாதிப்பால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், ஐந்து வயதிற்குட்பட்ட உடற்மருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 35 மில்லியனாக உயர்ந்திருக்கிறது என்றும், பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 மில்லியனை கடந்திருப்பதாகவும் அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆசிய நாடுகளில் சீனாவும்… தெற்காசிய நாடுகளில் இந்தியாவும்… உலக நாடுகளில் அமெரிக்காவும்… இத்தகைய வளரிளம் பருவத்து உடற்பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்கள் பெற்று, அவர்களுடைய பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வைத்தியர்கள் விவரிக்கையில், ” இயல்பான அளவை விட கூடுதலான உடல் எடை மற்றும் உடற்பருமனால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ இதனால் பெற்றோர்கள் அவர்களின் வளர்ச்சியிலும்.. உடல் எடையிலும்.. தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பிள்ளைகள் வழக்கமான வளர்ச்சி வீதத்தை விட உடல் எடை அதிகரித்தாலும்.. அவர்களுடைய இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் கொழுப்பு தேக்கம் அதிகரித்தாலும்.. அதனைத் துல்லியமாக அவதானித்து வைத்தியர்களிடம் ஆலோசனையும்… சிகிச்சையும்.. வாழ்க்கை நடைமுறை குறித்த பரிந்துரையையும் பெற வேண்டும்.

எம்முடைய பிள்ளைகள் கடந்த தசாப்தங்களைப் போல் அல்லாமல் உடற்பயிற்சியின்மை மற்றும் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதன் காரணமாக இத்தகைய உடற்பருமன் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் அவர்கள் டிஜிட்டல் திரையினை பார்வையிடும் நேரமும் அதிகம். இதன் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது. வேறு சில பிள்ளைகள் சீராகவும்.. முறையாகவும்.. ஆழ்ந்தும்… உறங்குவதில்லை. உறக்க சீரின்மை காரணமாகவும் இத்தகை பாதிப்பு ஏற்படக்கூடும். உறக்கம் சீர்குலைவதால் முறையாகவும் சீராகவும், சுரக்க வேண்டிய ஹோர்மோன் சுரப்பியில் சம சீரற்ற நிலை உண்டாகி உடல் எடை அதிகரிக்கிறது.

எனவே மேலே விவரிக்கப்பட்ட விடயங்களை பெற்றோர்கள் உள்வாங்கி தங்களது பிள்ளைகளின் உடல் எடையை அதிகரிக்காமல்.. அவர்களை சீரான உடல் எடையுடன் பராமரிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களின் எதிர்கால உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.