அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலகக் கோப்பைக்கு வரும் ரசிகர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் (CDC) ஆகியவை கூட்டாக விளக்கம் அளித்துள்ளன. உலகக் கோப்பை தொடரின் போது எபோலா பரவுவதற்கான வாய்ப்பு “மிக மிகக் குறைவு” என்று மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
காங்கோவில் இதுவரை 670-க்கும் மேற்பட்டோர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எபோலா என்பது கொரோனா அல்லது காய்ச்சல் போல காற்றின் மூலம் பரவும் நோய் அல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் (உமிழ்நீர், இரத்தம் போன்றவை) நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் மட்டுமே பரவக்கூடியது என்பதால், மைதானங்களில் அமர்ந்து சாதாரணமாகப் போட்டி பார்ப்பவர்களுக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் குளூக் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், இந்த ஆபத்து முற்றிலும் ‘பூஜ்ஜியம்’ என்று கூற முடியாது என்பதால், அமெரிக்கா தனது சுகாதாரக் கட்டமைப்பை முழுமையாகத் தயார்படுத்தி வைத்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா பரவலின் போது ஏற்பட்ட குளறுபடிகளைக் கற்றுக்கொண்ட அமெரிக்கா, தற்போது தீவிர காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைக் கையாள 260 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் 13 அதிநவீன சிறப்புச் சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் அட்லாண்டா போன்ற 11 அமெரிக்க நகரங்களில் உள்ள மருத்துவமனைகள், எபோலா அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, காங்கோ மற்றும் உகாண்டா போன்ற எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் அமெரிக்கர் அல்லாத பயணிகளுக்குக் தற்காலிகப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கழிவுநீர் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பதிவேடுகளை மின்னணு முறையில் கண்காணிக்கும் நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் ஏதேனும் அசாதாரண நோய் அறிகுறி தென்படுகிறதா என்பதைப் பொதுச் சுகாதாரத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.




