இலங்கை அகதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸி., முடிவு
26 Jul,2014
ஆஸ்திரேலியா வரும் இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தராமல், அவர்களை கைது செய்து இந்தியாவிடமே ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் வழங்கலாமா அல்லது இலங்கையிடமே ஒப்படைக்கலாமா என்பது குறித்து இந்தியாவே முடிவு செய்து கொள்ளட்டும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 157 இலங்கை அகதிகள், இந்தியாவில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றுள்ளனர். இவர்களை கைது செய்த ஆஸ்திரேலிய கடற்படை போலீசார், சுமார் ஒரு மாதம் வரை அவர்கள் கடற்படை கப்பலிலேயே தங்க வைத்திருந்தது. அவர்களை ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல விடாமல் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் ஸ்காட் மோர்சன், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என இன்னும் சரியாக தெரியவில்லை; அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமான காகோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; இது மேற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கார்ட் மோர்சன், சமீபத்தில் தான் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியா வந்த போது டில்லியில் இந்திய அமைச்சர்கள் பலரை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஆஸ்திரேலியா வரும் இலங்கை அகதிகளை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் இந்த கோரிக்கையை இந்தியா ஏற்க வேண்டும் என ஸ்கார்ட் மோர்சன் வலியுறுத்தி உள்ளார். ஆஸ்திரேலிய அரசின் இந்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்தியாவின் நிலை கொள்கையின்படி இந்தியா திரும்பும் எந்த குடிமகனையும் இந்தியா ஏற்றுக் கொள்ளும் எனவும், அதே சமயம் இந்தியாவில் இருந்து சென்ற இந்தியர் அல்லாத நபர்கள் இலங்கை செல்ல விரும்பினால் அவர்களின் கோரிக்கையை ஏற்கவும் இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்பினால் அது குறித்து இந்திய அரசு, கொள்கைகளின் அடிப்படையில் முடிவு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களை ஏற்றுக் கொண்டு அடைக்கலம் கொடுக்க முடியாது எனவும், அவ்வாறு நீங்கள் வந்தால் இங்கு வசிக்கவும் முடியாது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணி குடியேற்ற கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது என ஆஸ்திரேலிய அமைச்சர் மோர்சனும் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவை எதிர்த்து இலங்கை அகதிகள் பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆஸ்திரேலிய பிரதமர் டோணி அபாட், இலங்கை அகதிகளுக்கு தங்கள் அரசின் முடிவை மீண்டும் தெளிவுபடுத்தினார். மோர்சன் மூலம் இது குறித்து இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், மீறி நீங்கள் இங்கு வந்தாலும் இங்கு தங்க அனுமதி வழங்கப்படாது; நிரந்தர குடியுரிமையையும் பெற முடியாது எனவும் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச சட்ட நிபுணர் டொனால்ட் ரோத்வெல், அகதிகளாக வருபவர்களின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது; அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கே அவர்களை திருப்பி அனுப்புவதே சரியானதாகும்; அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கலாம் அல்லது அவர்கள் விரும்பினால் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்பி வைக்கலாம்; இதில் ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். அகதிகளாக வருபவர்களுக்கும் சர்வதேச மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் அகதிகள் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றொரு மனு குறித்து பேசிய டொனால்ட், மனுதாரர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல தயாராக இல்லை; அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலும் பல சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன; இத்தகைய சூழ்நிலையில் மனுதாரர்கள் கோர்ட்டின் உத்தரவை ஏற்று அதன்படி நடப்பதே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா செல்லும் இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்படுவார்களா அல்லது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுவார்களா என்பத தொடர்பான வழங்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என ஆஸ்திரேலிய கோர்ட் தெரிவித்துள்ளது