பின்தொடரும் மர்ம நபர்கள்: பொலிஸ் பாதுகாப்பும் லாபஸ்! அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் அனந்தி
டமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சில நாட்களாக மர்ம நபர்கள் தன்னைப் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியதில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் தன்னை தொடர்ச்சியாக பின்தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் மேல் மாகாண பதிவைக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை அரசாங்கம் மீளப் பெற்றுவிட்டது.
இது தொடர்பாக அவர் வட மாகாண சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்ததுடன், முதலமைச்சரிடமும் முறைப்பாடு செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில் மர்ம நபர்கள் மூலம் தன்னை அச்சுறுத்தி, தனது செயற்பாடுகளை முடக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலமாக தன்னை அடிபணிய வைக்க முடியாது என்று தெரிவித்துள்ள அனந்தி சசிதரன், தமிழ் மக்களின் உரிமைக்கான தனது அரசியல் போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபை மாதம் ஒன்றுக்குச் செலவிடும் வாடகை 12 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்! முதலமைச்சர் தகவல்
வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் பெயர்கள், அவற்றுக்கு கொடுக்கப்படும் வாடகைத் தொகை அத்துடன் முற்பணம் ஏதும் செலுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பான விவரங்களை வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராஜா, முதலமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “இந்தக் கேள்வியை எழுப்பியமைக்கு எதிர்கட்சித் தலைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் மூலம் எமது சபை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிக்காட்ட முடிந்துள்ளது. இவை யாவும் பிரதம செயலாளர் அலுவலகத்தினாலேயே ஒழுங்கமைத்துத் தரப்பட்டன.
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள், முதலமைச்சரின் வதிவிடம் என்பவற்றுக்காக மாதாந்தம் 12 இலட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபா நிதி வாடகையாகச் செலுத்தப்படுகின்றது. என்று தெரிவித்தார்.
அப்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மேற்படி வாடகை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு அமையவா செலுத்தப்படுகின்றது என்று கேள்வியயழுப்பினார். இதற்கு அடுத்த அமர்வில் பதிலளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.