யாழில் இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்! கோட்டபயவின் உத்தரவில் பேரிலே தாயும் மகளும் கைது!
14 Mar,2014
யாழில் இராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்! நீதி கேட்டதால் விபரீதம்!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நியாயம் கோரிய மக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அங்கு நின்றிருந்தவர்களை பிடித்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோண்டாவில் பலாலி வீதி ஓரத்தில் நின்றிருந்த இளைஞர்கள் மூவர் மீது வேகமாக வந்த இராணுவ வாகனம் மோதியிருக்கின்றது. சம்பவத்தில் இளைஞர்கள் மூவர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
இளைஞர்கள் படுகாயம் அடைந்தமையை அடுத்து அங்கு திரண்ட மக்கள் குறித்த இராணுவ வாகனத்தினைச் சுற்றிவளைத்து நியாயம் கோரியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து அங்கு இரண்டு வாகனங்களில் வந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் நின்றிருந்த மக்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியதுடன் அங்கு நின்றிருந்த மக்களையும் பிடித்துவைத்திருப்பதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வழமைக்கு மாறாக வன்னியில் பல இடங்களிலும் இராணுவத்தினர் தீவிர சோதனைக் கெடுபிடியினை மேற்கொண்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மிக தீவிரமாக இடம்பெற்றுவருவதாக முல்லைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டபயவின் உத்தரவில் பேரிலே தாயும் மகளும் கைது!
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் தாயும், மகளும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனோர் தொடர்பான பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் பங்கு பற்றி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவே உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதேவேளை இந்த கைது சம்பவத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்டால் 24 மணித்தியாலத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், எனினும் இன்னும் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.