இலங்கைக்கு மீண்டும் பெய்லி பாலங்களை அனுப்பியது இந்தியா
31 Jan,2026
இலங்கை டித்வா, புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் புனரமைப்பு பணிகளுக்காக மற்றுமொரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கைக்கு, இந்தியா இன்று (ஜனவரி 31) அனுப்பியது.
டித்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்தன. துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க இந்தப் பாலங்கள் உதவும்.
தற்காலிக இரும்புப் பாலங்கள்
இது குறித்து இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இவை எளிதில் எடுத்துச் செல்லக்கூடியவை மற்றும் விரைவாகக் கட்டமைக்கக்கூடிய தற்காலிக இரும்புப் பாலங்கள் ஆகும். அவசர கால மீட்புப் பணிகளுக்கு இவை மிகவும் உகந்தவை.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் இந்த தளவாடங்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்துத் தொடர்பை மீட்டெடுக்க இந்தப் பாலங்கள் பயன்படுத்தப்படும்.