அனர்த்த நிவாரண நிதியாக 10 பில்லியன் ஒதுக்கீடு: இன்று முதல் விநியோகம்! - அமைச்சர் ஆனந்த
05 Dec,2025
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி நிவாரணமளிக்க 10 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் இந்நிதி நிவாரணம் இன்று முதல் வழங்கப்படும். முழு நாடும் துயரத்தை எதிர்கொண்டுள்ள போது எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள். போலியான விடயங்களை சமுகமயப்படுத்தாமல் இருப்பது வழங்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பாகும் என எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்துகிறேன் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு என்ற ரீதியில் மிக மோசமான பேரிடரை எதிர்கொண்டுள்ளோம். இழப்புக்களை மதிப்பிட முடியாத நிலை உள்ளது.முப்படையினரும், பொலிஸாரும்,நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு மீட்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். கடந்த 25 ஆம் திகதி முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளன.
அனர்த்த நிலை ஏற்பட்ட நாளில் இருந்து முப்படையினரும், பொலிஸாரும் தமது உயிரை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கு 10 பில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச சபைகள் ஊடாகவும் நிதி நிவாரணம் இன்று முதல் வழங்கப்படும். நெருக்கடி நிலையில் போது ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்காமல் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
முழு நாடும் துயரத்தை எதிர்கொண்டுள்ள போது எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள். போலியான விடயங்களை சமுகமயப்படுத்தாமல் இருப்பது வழங்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பாகும் என்று எதிர்க்கட்சியினருக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.