தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சித் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழைச் செய்கை பற்றிய பயிற்சி நெறியில் பங்கு கொண்ட பயிற்சியாளர்கள் இராணுவத்தினராலும் பொலிசாராலும் தடுத்துவைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கிராஞ்சிப் பகுதியில் இருந்து கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விவசாய சங்கம் ஆகிய அமைப்புகளிலிருந்து ஐந்து ஆண்கள் உள்ளிட்ட 45 அங்கத்தவர்கள் இவ் ஒருநாள் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காகக் கிராஞ்சியிலிருந்து வட்டக்கச்சி சென்றனர்.
பயிற்சி முடிந்து வரும்போது தமது வீடுகளில் நடுவதற்காக மா, பலா, ஜம்பு நாவல், தேசி, தோடை போன்ற பழக் கன்றுகளை அவர்கள் விலைக்குக் கொள்வனவு செய்துள்ளனர்.
திரும்பி வரும் வழியில் பன்னங்கண்டி இராணுவ முகாமருகே இராணுவத்தினரால் கிராஞ்சியிலிருந்து சென்ற, அங்கத்தவர்கள் பயணித்த பேருந்து வண்டி மறிக்கப்பட்டது. பேருந்தினுள் ஏறிய பொலிசார் பயிற்சியாளர்களது அடையாள அட்டைகளைக் கேட்டதுடன் அங்கிருந்த பழக்கன்றுகள் தொடர்பாகக் கடுமையான விசாரணையை மேற்கொண்டனர்.
மாவீரர் நாளின் போது நடுவதற்காகவே அப் பழக்கன்றுகள் கொள்வனவு செய்யப்பட்டன என்ற நோக்கில் கிராஞ்சி அமைப்புகளின் அங்கத்தவர்களை விசாரணை செய்ததுடன் அவர்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் இம்மாதத்தில் குழுக்களாக யாரும் நடமாடக் கூடாது என்றும், அடையாள அட்டை இன்றி யாரும் வெளிவரக் கூடாது எனவும் கடுமையான தொனியில் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்காகவே பழக் கன்றுகள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்று பொலிசாருக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட வகையில் மக்களின் இயல்பு வாழ்க்கையினைப் பாதிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கசினோ பற்றுள்ள தேசத்துரோக வரவு செலவுத் திட்டம்: ஐக்கிய தேசியக் கட்சி
2014 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் கசினோ பற்றுள்ள தேசத் துரோக வரவு செலவுத் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வரவு செலவுத் திட்டம் ஆடம்பரமான கசினோ வகுப்பினருக்கும் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
லம்போகினி வாகனத்தை பயன்படுத்தும் திருடர்களான கசினோ வியாபாரிகளுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களை விட கசினோ வியாபாரிகள் இந்த அரசாங்கத்தின் மேன்மையானவர்கள் மாறிவிட்டனர். அத்துடன் வெட்கமின்றி விவசாயிகளுக்கான ஓய்வூதியம் பற்றி இந்த அரசாங்கம் பேசுகிறது.
எனினும் விவசாயிகளுக்கு ஓய்வூதியங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இனி வரும் காலங்களில் தொலைபேசிக்கு 100 ரூபா ரீலோட் செய்யும் நபர்கள் அதில் 25 ரூபாவை ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
அதேபோல் இந்த நாடு போல் உணவுக்கு வரி விதிக்கும் நாடுகள் உலகில் எங்கும் இல்லை. உணவுப் பொருட்களில் சிலவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு 800 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி புதுமையான கதை ஒன்றை கூறினார். 20 ஆயிரம் பால் கொடுக்கும் பசுக்களை இறக்குமதி செய்ய போவதாகவும் பால் கொடுக்கும் ஒரு பசுவின் விலை 8 லட்சம் ரூபா எனவும் ஜனாதிபதி கூறினார்.
எனினும் இதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை தொடர்ந்தும் குறைத்து வருகிறது.
வெளிநாட்டவர்களுக்கு நாட்டில் உள்ள காணிகள் விற்பனை செய்யப்படாது என்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டாலும் கொள்ளுப்பிட்டியில் 250 பேர்ச் காணி அண்மையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டது என்றார்.
பிரித்தானிய பிரதமருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!- பின்னணியில் அரசு?
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சுயாதீனமான குழு என தம்மை கூறிக் கொண்ட குழுவினர் நடத்தினர்.
கொழும்பில் அண்மையில் முடிவடைந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், போர் குற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் சுதந்திரமான வெளிப்படையான விசாரணைகளை நடத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தம்மை சுயாதீனமான குழுவினர் என்று கூறிக் கொண்டாலும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாழைச்சேனையில் கடலில் மூழ்கிய இருவரை மீட்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!
கடலில் மூழ்கிய இருவரை மீட்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, நாசிவன்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை அக்பர் பள்ளி வீதியைச் சேர்ந்த அல் ஹாபீஸ் மீராமுகைதீன் முஹம்மது பயாஸ் என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர், வியாழக்கிழமை (21) காலை குடும்பத்தாருடன் நாசிவன்தீவு கடற்கரைக்குச் குளிக்கச் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தங்களுடன் வந்த இருவர் நீரிழ் மூழ்கியதைக் கண்டு அவர்களைக் காப்பாற்றுவதற்கு இவர் முயற்சித்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வாழைச்சேனை குல்லியதுன் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் இறுதி ஆண்டி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காணி பகிர்ந்தளிக்காமலிருக்கவே மலையகத்தில் தொடர் மாடி வீடுகள் யோசனை!- பட்ஜெட் குறித்து மனோ கணேசன்
தோட்ட தொழிலாளருக்கு 50,000 அலகுகளை கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிக்கும் யோசனையை முன்மொழிவதாக ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைக்கு சபையில் அவ்வேளையில் இருந்த மலையக பிரதிநிதிகள் கரகோஷம் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால், இது மாடி மேலே மாடி கட்டும் தொடர் மாடி வீட்டு திட்டம் என்பதையும், தோட்ட தொழிலாளருக்கு மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்ட காணி உரிமை இன்னமும் வெகு தூரத்தில் இருப்பதை இது அடையாளப்படுத்துகின்றது என்பதையும் மலையகம் உணர்ந்து கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட யோசனைகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட துறையில் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் முன்னேறியுள்ளதாக வரவு செலவு திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிசு மரண விகிதம், அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் முதல் மூன்று மாதத்தில் இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது.
2009ம் வருடம் வரைக்கும் 32 விகிதமாக இருந்த மலையக வறுமை விகிதம் திடீரென குறைந்துவிட்டதாக ஏற்கனவே அரசாங்கம் சொல்லி வருவதை போன்றதான இந்த தரவுகளையும் நாம் ஏற்றுகொள்ள முடியாது.மலையக தோட்ட தொழிலாளர்கள் இந்நாட்டின் ஏனைய பிரிவு மக்களைவிட ஒப்பீட்டளவில் பின்தங்கிய வளர்ச்சி கட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது அடிப்படை உண்மை.
காணி நிலம் மற்றும் வீடமைப்பு துறைகளில் அரசு கபட நோக்கத்துடன் நடக்கின்றது. இது தொடர்பாக கடந்த 2005/2010 ஜனாதிபதி தேர்தல் வேளைகளிலில் மகிந்த சிந்தனைகளில் சொல்லப்பட்ட மற்றும் கடைசியாக நடைபெற்ற மாகாணசபை தேர்தல் வரை வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேறவில்லை.
மாடி வீடுகள் பொதுவாக நிலம் இல்லாத நகரப்பகுதிகளிலேயே கட்டப்படுகின்றன. இதுவே உலக நடைமுறை. கிராம பகுதிகளிலும், குறிப்பாக மலைப்பகுதிகளிலும் தொடர் மாடி வீடுகள் கட்டப்படுவதில்லை. ஆனால், இந்த வரவு செலவு திட்ட யோசனையின்படி அரசாங்கம் மாடி வீட்டு தொகுதிகளை மலையகத்தில் கட்ட போவதாக சொல்கிறது.
இந்த கட்டுமான பணிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் நகர அபிவிருத்தி சபையின் மூலம் கட்டப்பட உள்ளன என்ற கருத்தும் வரவிருக்கும் எதிர்காலத்தை பற்றி பூடகமாக அறிவிக்கிறது. இந்த தொடர்மாடி வீடுகள் என்ற நடைமுறை, தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழில் செய்யும் இடத்தில் பணியாளருக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர்கள் என்ற மனநிலையிலேயே வைத்திருக்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.
இதற்கு தேவைப்படும் சுமார் 750 மில்லியன் டொலர் நிதி சர்வதேச உத்தரவாதத்தின் மூலம் பெறப்பட உள்ளதாகவும் அரசு கூறுகிறது. நாட்டின் ஏனைய பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி பெற்றுகொள்வது தொடர்பில் தெளிவான வழிமுறைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த பெருந்தோட்ட வீடமைப்புக்கான நிதி பெறுதல் தெளிவில்லாமல் பொதுப்படையாக இருக்கின்றது
ஆகவே, தோட்ட தொழிலாளருக்கு காணிகள் பகிர்ந்து வழங்கும்படியும், தமது சொந்த நிலங்களில் அவர்கள் தமது வீடுகளை கட்டிக்கொள்ள, அவர்களது சேமலாப நிதியத்தில் இருந்து இலகு தவணை கடன் வழங்கும்படியும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள், தமது அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
இதன் மூலமாகவே சொந்த காணி நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வாழும் கிராமத்தவர்கள் என்ற மனநிலையை மலையக மக்கள் பெறுவார்கள்.
அடக்கி வைக்க முடியாத அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் முறைப்பாடுளை செய்யும் கோத்தபாயவின் குழு?
ராஜபக்சவினருக்கு எதிராக குரல் கொடுக்கும் அடக்கி வைக்க முடியாத அமைச்சர்களுக்கு எதிராக குழுவொன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது.
ராஜபக்சவினரால் அடக்கி வைக்க முடியாத அமைச்சர்களுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழ் செயற்பட்டு வரும் இந்த குழுவிற்கு எதிராக இணைந்து போராட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர்கள் மேர்வின் சில்வா, மகிந்தானந்த அளுத்கமகே, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி அந்த குழு பல முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அமைச்சர்களான ஜனக பண்டார தென்னகோன், மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, ஜகத் புஷ்பகுமார, பியசேன கமகே, ஏ.எச்.எம்.பௌசி, மகிந்த அமரவீர, சரத் குணரட்ன, தயாஸ்ரீத திசேரா, எஸ்.பி. நாவின்ன, ஜயரத்ன ஹேரத், சாலிந்த திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராகவும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அரச புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை சேகரித்து வருவதுடன் முறைப்பாடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த அமைச்சர்கள் அண்மைய காலத்தில் சேர்த்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்ன என்பது பற்றிய விபரங்களை அரச புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளனர்.
தமக்கு அடங்காத அமைச்சர்களை அடக்கி வைக்கும் நோக்கில் இந்த முறைப்பாடுகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் ஊடாக மேற்கொண்டு வருகிறார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் அதேவேளை, அந்த அமைச்சர்களை தொடர்பு கொள்ளும் ஜனாதிபதி "அஞ்சத் தேவையில்லை சரி செய்து விடலாம்" எனக் கூறி வருகிறார்.
இந்நிலையில், ராஜபக்சவினர் தமக்கு எதிராக மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.