பாகிஸ்தானில் ஈரான் தீவிரவாத தலைவர் கைது
02 Mar,2015
பாகிஸ்தானில் ஈரான் தீவிரவாத தலைவர் கைது
ஈரானில் தடை செய்யப்பட்டுள்ள பலுச் சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாத குழுவின் தலைவர் சலாம் ரிகி. இவர் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த தென்மேற்கு பகுதியில் ஒரு பஸ்சில் நேற்று முன்தினம் பயணம் செய்தார். இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர் குயெட்டா நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் பஸ்சில் பயணம் செய்ததை அறிந்து, பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பஸ்சை வழிமறித்து, சலாம் ரிகியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. கைது செய்தபோது அவர் எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், அவர் ஈரானில் உள்ள ஷியா பிரிவு அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.இந்த ரிகி, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் தொடர்பு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது