சைபீரியக் காடுகளில் தொலைந்துபோன 3 வயது சிறுமி மீட்பு
13 Aug,2014
சைபீரியாவின் சகா குடியரசின் ஒலோம் நகரில் வசித்துவந்த கரீனா சிகிடோவா என்ற மூன்று வயதுப் சிறுமி கடந்த மாதம் 29ஆம் தேதி அவரது தந்தை வெளியே சென்றபோது தனது செல்ல நாயுடன் பின்தொடர்ந்துள்ளாள். ஆனால் சிறிது தூரத்தில் அவள் தனது தந்தை சென்ற வழியை அவள் தவறவிட்டுவிட்டாள். போன் தொடர்புகள் சரிவர இல்லாததால் கரீனாவின் தாய் கிராமத்துக்கு சென்ற தனது தந்தையுடன் கரீனா சென்றிருப்பதாக நினைத்திருக்க தந்தையோ அவள் தாயுடன் இருப்பதாக நினைத்துள்ளார்.
நான்கு நாட்களுக்குப்பின்னர் இருவரும் பேசிக்கொண்டபோதுதான் கரீனாவைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் ஒன்றில் மீட்புப் பணிக் குழுவினரும் அதன்பின்னர் ஆளில்லா விமானம் மூலமும் தேடுதல் வேட்டையை மேற்கொண்டபோதும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கரடிகளும், ஓநாய்களும் சுற்றித்திரியும் அடர்ந்த காட்டுப் பகுதியுடன் இரவு நேரங்களில் அங்கு கடும் பனியும் காணப்படும் என்பதால் கரீனாவைப் பற்றி அவளது பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.
ஒன்பது நாட்கள் கழித்துத் திரும்பிவந்த அந்த நாயினைத் தொடர்ந்து மீட்புக்குழுவினர் சென்றபோது உயர்ந்து வளர்ந்திருந்த புல்கற்றைகளுக்கு இடையே ஒடுங்கியிருந்த சிறுமியை அவர்கள் மீட்டுள்ளனர்.
இத்தனை நாட்களும் காட்டுப் பகுதியில் கிடைத்த பழங்களை சாப்பிட்டு ஆற்றுத் தண்ணீரையே குடித்துவிட்டு அந்தப் சிறுமி சுயநினைவுடன் இருந்தாள். 10 கிலோ எடை குறைந்திருந்தபோதும் தனது மன உறுதியை இழக்காத கரீனா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பத்திரிகைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.