ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கையால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அலறல்
10 Aug,2014
ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாக, அந்நாடுகளில் இருந்து, பழங்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி மற்றும் விற்பனையை, நேற்று முன்தினம் ரஷ்யா தடை செய்ததால், அந்நாடுகள் அலறியுள்ளன. 'இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என தெரிவித்துள்ளன.
முந்தைய சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றான, உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு, ரஷ்யா ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, கடந்த மாதம், அந்நாட்டின் மீது, அமெரிக்கா மற்றும் 28 நாடுகளை கொண்ட, ஐரோப்பிய யூனியன் அமைப்பு, பொருளாதார தடை விதித்தது. ராணுவம், எரிசக்தி மற்றும் நிதி தொடர்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், கோபம் கொண்ட ரஷ்யா, அந்நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க உணவு மற்றும் தின்பண்ட நிறுவனங்களான, மக்டொனால்டு, கே.எப்.சி., போன்றவற்றிற்கு, ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ஐரோப்பிய யூனியனில் இருந்து ரஷ்யாவுக்கு இறக்குமதியாகும், பழங்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு, ரஷ்யா தடை விதித்தது. அந்நாடுகளின் இரண்டாவது பெரிய சந்தையான ரஷ்யாவில், ஐரோப்பிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அந்நாடுகள் அலறியுள்ளன. 'அரசியல் காரணங்களுக்காகவும், பழிக்கு பழியாகவும் செய்யப்பட்டுள்ள இந்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்' என, அந்நாடுகள் வற்புறுத்தியுள்ளன. இது குறித்து, நேற்று, ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தலைமையகம் அமைந்துள்ள ஜெர்மனியின் பிரஸ்சல்ஸ் நகரில் கூடிய, 28 நாடுகளும், ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.