'புலிப்பார்வை' தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கதை திரைப்படமாகிறது .
25 Jul,2014
.
ஈழப்போரின் போது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘புலிப்பார்வை’ என்ற படம் உருவாகியுள்ளது.
‘ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரவீன்காந்தி இப்படத்தை இயக்கி, இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து கூறிய பிரவீன்காந்தி, “ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் சிறீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம்.
பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்கு முன் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும் விதமாய் படத்திற்கு ‘புலிப்பார்வை’ என பெயர் வைத்துள்ளோம்.
இதை படமாக எடுப்பதற்கு முன், இந்த கதையை சென்சார் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி வாங்கினேன். இப்படத்தில் பாலச்சந்திரன் கதாபாத்திரத்தில் சத்யா என்ற சிறுவன் நடித்திருக்கிறார். நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்தியாவுக்கு விடுதலை புலிகள் எதிரிகள் இல்லை என்பதையும். தமிழர்களின் வீரத்தையும் பதிவு செய்யும் விதமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். என்னுடைய ரட்சகன் உள்ளிட்ட படங்கள் எப்படி பிரம்மாண்டமாக, அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டதோ, அதேபோல இப்படம் பிரம்மாண்ட படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கு தேவையான பல சுவாரஸ்யமான அம்சங்கள் இப்படத்தில் உள்ளது. இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.” என்று தெரிவித்தார்.
சிறுவன் சத்யா பேசும்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக எனது பள்ளிக்கு இயக்குநர் நேரில் வந்து என்னை தேர்வு செய்தார். என்னுடைய இன்னொரு சிறுவனையும் தேர்வு செய்து வைத்திருந்தார். அப்போது, பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் இந்த படத்தில் நாம் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தினேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. அந்த கதாபாத்திரத்தை நான் நன்றாக செய்திருப்பதாக உணர்கிறேன் என்றான்.
வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்