இன்று ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தல்: 4-வது முறையாக சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல்
24 Sep,2017
பெர்லின் : ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய சான்சலர் ஏஞ்சலா மெர்கல், 2-வது முறையாக சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
311 இடங்களில் வெற்றி
ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிகளிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக (அரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று தேர்தல்
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் போட்டியில் உள்ளனர். சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அதுவரை தற்போதைய அரசு பதவியில் இருக்கும்.