இலங்கையில் பிரிட்டன் ஊடகவியலாளர் முதலையிடம் சிக்கி பலி
15 Sep,2017
இலங்கையில் முதலை ஒன்றினால் தாக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதாக அவரைப் பணியமர்த்தியுள்ளவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வேளை நீரோடையொன்றில் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பால் ஸ்டூவர்ட் மெக்லின் எனும் அந்த ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times ) எனும் இதழில் மெக்லின் பணியாற்றி வந்தார்.
24 வயதான மெக்லின் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு சுற்றலா சென்றிருந்த வேளை இந்த பரிதாபகரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கும் அருகம்மே பகுதியில் தங்கியிருந்த இவர் நேற்று வியாழக்கிழமை குடாக்கல்லி கடலில் நீராடிவிட்டு திரும்பும்போது நீரோடையொன்றில் கை கழுவ சென்றிருந்த வேளை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
மெக்லின் முதலையால் தாக்கப்படுவதை அங்கிருந்த மீனவர்கள் கண்டுள்ளனர்
கடலும் நீர் நிலையொன்றும் சங்கமிக்கும் அந்த இடம் முதலைக்குன்று என உள்ளுர் மக்களால் அழைக்கப்படுகின்றது.
கடற்படையினரின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை அவரது சடலம் மீட்கபட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அவரது நண்பர்கள் அவரின் உடலை அடையாளம் காட்டியுள்ளனர்.