...................................
உன் நண்பன் யார் என்று சொல், நான் நீ யார் என்பதைச் சொல்கிறேன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நண்பர்களின் உலகம்தான் ஒரு இளைஞனின் நல்லதுக்கும் கெட்டதுக்குமான உலகமாக இருக்கிறது. குறிப்பாக இளம் வயதில் பிள்ளைகளுக்கு நண்பர்கள்தான் உலகம். ஒரு சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து சாஃப்ட்வேர் பிஸினஸ், கட்டடப் பணிகள் என வளர்ந்துகொண்டே போகிறார்கள். வேறு சில நண்பர்களின் குழுக்களோ எதிர் மறையான பலன்களையும் தந்துவிடுவது உண்டு. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என வாழ்வார்கள். இப்படிப்பட்ட கூடாநட்பு கேடாய் முடிவதும் உண்டு.
இதனால்தான், ‘நல்லதுக்கும் நாலு பேர் வேண்டும், கெட்டதுக்கும் நாலு பேர் வேண்டும்’ எனச்சொல்லி வைத்தார்கள். நல்லது செய்ய நாலு பேர் கூடுவதைவிட, கெட்டது செய்ய பத்து பேர் கூடி விடுகிறார்கள். இது எதனால் நடக்கிறது?
ஒருவருக்கு அமையும் நண்பர்களை எப்படி அறிவது? அப்படி தவறான நண்பர்கள் அமைந்தால் அவர்கள் அதற்கு முறையான பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? என ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியைக் கேட்டோம்.
நண்பர்களுக்குரிய ஜாதக ரீதியான இடத்தைப் பார்க்கும்போது 7-ம் இடத்தைத்தான் பார்க்க வேண்டும். 7- ம் இடம் என்பது மனைவியை பற்றிக் கூறினாலும் நண்பர்களுக்கும் உரிய இடமும் அதுதான். ஜாதக ரீதியாக இரண்டு உறவுகளுமே நமக்கு வெளியில் இருந்துதான் ஏற்படுகின்றன. ஒரு சில வேளைகளில் வேண்டுமானால் நம் சொந்தத்தில் அமைவதுண்டு. ஆக இரண்டு பேருமே 7-ம் பாவம்தான். இங்கு கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்துத்தான் இவர்களது நட்பு நல்ல விதமாக இருக்குமா? இருக்காதா என்பதைச் சொல்ல முடியும்.
* ஒருவருடைய ஜாதகத்தில் யோகாதிபதியான 9-ம் வீட்டுக்கு உடையவன் கெட்டு விட்டால் ஜாதகருக்கு பெரிய அளவில் எந்தவிதமான யோகமும் நடைபெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
* ஜாதகத்தில் பாதகம் செய்யும் கிரகம் அதிகபலம் பெற்றால், ஜாதகருக்குக்கு எண்ணங்களே தவறான பாதையை நோக்கி இழுத்துச்செல்லும். உதாரணமாக, அவருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தால் உடனே அவர் சினிமா, ஓட்டல் என செலவிடவே மனம் செல்லும்.
* 3. 6, 8, 12 -ம் இடத்துக்குடையவர்கள் அதிகம் பலம் பெற்று 6, 8, 12 -ம் இடத்தில் இருந்தால் கேளிக்கைச் செயல்களில் ஈடுபட தயங்க மாட்டார்கள். தன் சகாக்கள் மத்தியில் புகழ் பெற வேண்டுமென்பதற்காக எதையும் செய்வார்கள். தவறான செயல்களை சாகசமாக செய்து அவர்கள் பாராட்டைப் பெறுவார்கள்.
* 4. 6, 8, 12 -ம் இடத்துக்குடையவர் ஜாதகருக்கு பாதகாதிபதியுடன் இணைந்து, அதற்குரிய தசா – புக்தியும் நடந்தால் தீயச்செயல்களில் தயக்கம் இல்லாமல் ஈடுபடுவார்கள்
* 5. 6, 8, 12 -ம் வீட்டுக்குடையவர்கள், தங்கள் வீடுகளில் மாறி நின்றாலும் இவர்களது தசா- புக்தி காலத்தில் தவறான பாதையில் சென்று பொருள் ஈட்டி, பிறகு சிக்கிக்கொள்வார்கள்.
* ஜாதகத்தில் முக்கிய கிரகங்களாக கருதப்படும் லக்னாதிபதி, ராசி அதிபதி, திரிகோணாதிபதிகள் (1,5, 9-ம் வீட்டுக்கு அதிபதிகள்) நீசம் பெற்றாலும், ராகு – கேதுவுடன் சேர்ந்து தசா புக்தி நடந்தாலும் எந்த பழிபாவத்துக்கும் அஞ்ச மாட்டார்கள்.
பரிகாரம்:
நல்லபுத்தி, நல்ல நண்பர்கள் அமைய வேண்டுமானால் திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழிபட்டால் கெட்டது நீங்கும். தெளிவான மனநிலையையும் தரும். கூடவே, அமாவசை அன்று, குலதெய்வ வழிபாடு செய்தால், தீய நண்பர்கள் விலகி பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் அமையும் சூழ்நிலை உருவாகும்.