MH 17 விமான விபத்து: மீட்கப்பட்ட 282 உடல்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்படுகிறது. டி.என்.ஏ. சோதனை செய்ய முடிவு
24 Jul,2014
கடந்த 17ஆம் தேதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட MH 17 விமான பயணிகளின் உடல்கள் அனைத்து மீட்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ரயில்மூலம் கீவ் நகர விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இன்று இரவு முதல் ஐந்து கட்டங்களாக அந்த உடல்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்படும் என்றும், அதன்பின்னர் அந்த உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று கீவ் ரயில் நிலையத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் உக்ரைன் அரசு அதிகாரிகளிடம் இருந்து முறைப்படி 282 உடல்களை பெற்றுக்கொண்டனர். இன்று இரவு விமானம் மூலம் முதல் கட்டமாக 50 உடல்கள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், நாளை இரவுக்குள் ஐந்து கட்டமாக அனைத்து உடல்களும் நெதர்லாந்து சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து மருத்துவமனையில் 150 ஃபாரன்சிக் அதிகாரிகள் டி.என்.ஏ மூலம் உடல்களை அடையாளம் காண தயாராக உள்ளனர். ஏற்கனவே பலியான பயணிகளின் உறவினர்கள் நெதர்லாந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் பலியான 16 பேர்களின் உடல் கிடைக்கவில்லை அந்த உடல்களை தேடும் பணியில் உக்ரைன் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்புப்பெட்டியையும் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்த தகவலை மலேசிய பிரதமர் Najib Razak அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.