ராஜீவ்; காங்கிரஸ்காரர்கள் பதில் சொல்வார்களா?
20 Feb,2014
ஈழம் - ராஜீவ்; காங்கிரஸ்காரர்கள் பதில் சொல்வார்களா?
ராஜீவ் காந்தியின் மரணம் உண்மையிலேயே ஒரு துன்பியல் நிகழ்வுதான். ராஜீவ் கொலையில் நேரடியாக சம்பத்தப்பட்டவர்கள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் கொலைக்கு உதவியதாக குற்றம்சாற்றப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் காந்தியால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பதில் சொல்வார்களா?
1987-ல் நெல்லியடி முகாமை, கப்டன் மில்லர் தகர்த்து எறிந்து நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்ற பின்னர், தமிழ் ஈழப்பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்தியிடம் ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல் 1990க்கு முன்னரே தமிழ் ஈழம் நமக்கு கிடைத்திருக்கும். அந்த வெற்றியைத் தடுக்க ராஜீவ் காந்தி செய்த சூழ்ச்சியே ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்.
தியாக தீபம் திலீபன் இந்தியாவின் செயல்களைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்டவர்தான் ராஜீவ் காந்தி.
குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்த காலத்தில் ராஜீவ் காந்தியின் படைகள் சிங்கள ராணுவத்திடம் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர். இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000. IPKF என்ற கொலைவெறி, காமப் படையால் ஈழத்தில் மானபங்கப்படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை சுமார் 2000க்கு மேல். இவ்வளவு அட்டூழியங்களுக்கும், கொடுமைக்கும் காரணம் ராஜீவ் காந்தி.
இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் பணம்-சொத்து மதிப்பு சுமார் 1500 கோடிக்கு மேல்.
இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏதிலிகளான தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20000 பேருக்கு மேல்.
இந்திய அமைதிப் படையின் துப்பாக்கி குண்டுகளாலும், எறிகணைகளாலும், கை கால்களை, கண்களை, செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000க்கு மேல். அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி.
ராஜீவ் காந்தியால் ஈழத்தில் நடந்த இவ்வளவு கொடுமைகளுக்கும், இன்றுவரை காங்கிரஸ்காரர்களிடம் பதில் இல்லை. ராஜீவ் காந்தி கொலையில் ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் அறிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? சந்திராசாமி எங்கே சென்றார்? இதுநாள் வரை சுப்பிரமணிய சாமியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேச துப்பில்லாத காங்கிரஸ்காரர்கள், ராஜீவ் கொலையில் நேரடித் தொடர்பில்லாமல் தனிமைச் சிறையில் 23 ஆண்டு காலத்தை இழந்த 7 பேரின் விடுதலையை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?