நெடுந்தொலைவு கடந்து வந்த ஒரு வழிப்போக்கன் மிகவும் களைப்படைந்தான். பசியும் தாகமும் மிக அதிகமாக இருந்தது. பொழுதும் இருட்டி வந்தது. அப்போது, வழியோரத்தில் ஒரு சிறிய வீடு இருப்பது தெரிந்தது. இன்று இரவு இங்கே தங்குவதற்கு இடம் கேட்கலாம் என்று நினைத்த வழிப்போக்கன், அந்த வீட்டின் கதவைத் தட்டினான். உள்ளே
இருப்பவர்கள் யாராயிருந்தாலும் தன்னை வரவேற்பார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.
ஒரு பாட்டி கதவைத் திறந்தாள். அவள் பெரிய கருமி. அவள் அந்த வழிப்போக்கன் சொன்னதைக் கேட்டு, ""நீ இரவு தங்குவதற்கு இங்கே இடமில்லை. உனக்கு சாப்பிடக் கொடுப்பதற்கும் என்னிடம் எதுவுமில்லை. நீ போகலாம்!'' என்றாள். இவளைப் பற்றிப் புரிந்துகொண்ட வழிப்போக்கன், ""ஒரு கோடாலி இருந்தால் சற்று இரவல் கொடு பாட்டி. நான் கோடாலிக் கஞ்சி வைத்துக் குடித்துவிட்டுப் போய்விடுகிறேன்'' என்றான்.
"இத்தனைக் காலம் தான் வாழ்ந்திருக்கிறோம், கோடாலிக் கஞ்சி என்ற கஞ்சியைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையே! கோடாலியில் கஞ்சி வைக்க முடியுமா? இது உண்மையில் மிகவும் அதிசயம்தான்! அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும்!' என்று நினைத்தாள் பாட்டி. அவள் உடனே ஒரு கோடாலியைக் கொண்டு வந்து கொடுத்து,""இந்தா, கோடாலி. நீ கஞ்சி வைத்துக் குடித்துவிட்டுக் கிளம்பு''என்றாள்.
அவன் அடுப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கோடாலியை வைத்தான். அடுப்பைப் பற்ற வைத்தான். பிறகு பாட்டியைப் பார்த்துக் கேட்டான்,""பாட்டி, கொஞ்சம் மாவும் உப்பும் இருந்தால் கோடாலிக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் என்ன செய்வது? உங்களிடம்தான் எதுவும் இல்லையே!''என்றான். எப்படியாவது கோடாலிக் கஞ்சியை சுவைத்துப் பார்த்துவிட ஆவல் கொண்ட பாட்டி, உடனே அவற்றைக் கொடுத்தாள்.
சற்று நேரம் கழித்து மீண்டும் வழிப்போக்கன் கேட்டான்,""கொஞ்சம் காய்கறிகள் மட்டும் இருந்தால் கோடாலிக் கஞ்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.ஆனால் என்ன செய்வது? உங்களிடம்தான் எதுவும் இல்லையே!'' கோடாலியைக் கொண்டு கஞ்சி வைப்பது எப்படி என்று அறிய ஆர்வம் கொண்ட பாட்டி, உடனே காய்கறிகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அவற்றை வெட்டி பாத்திரத்தில் போட்டான்.
பிறகு வழிப்போக்கன்,""பாட்டி, கொஞ்சம் நெய் மட்டும் இருந்தால் இந்தக் கோடாலிக் கஞ்சி மிகச் சிறப்பாக இருக்கும், என்ன செய்வது? உங்களிடம் எதுவுமே இல்லையே!'' என்றான். அதிசயமான அந்தக் கோடாலிக் கஞ்சியை சாப்பிட வேண்டும் என்ற ஆசையினால் பாட்டி, உடனே நெய்யும் கொண்டுவந்து கொடுத்தாள். எப்போது சமையல் முடியும் என்று பெரு விருப்பத்துடன் காத்திருந்தாள்.
சமையல் முடிந்தவுடன் பாத்திரத்திலிருந்து கோடாலியை எடுத்துத் தனியாக வைத்தான் வழிப்போக்கன். கஞ்சியை இரண்டு தட்டுகளில் ஊற்றினான். ஒன்றை பாட்டியிடம் கொடுத்தான். தான் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை அந்தப் பாட்டி உணரவே இல்லை. வழிப்போக்கன் சாமர்த்தியமாகக் கேட்டான். ""பாட்டி, எப்படியிருக்கிறது கோடாலிக் கஞ்சி?''
அந் தக் கருமிப் பாட்டி சொன்னாள்,"" அடடா, இந்தக் கஞ்சி மிகவும் அருமையாக இருக்கிறது. கோடாலியைக் கொண்டு மரம் வெட்டத்தான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதைக் கொண்டு இப்படி அருமையான கஞ்சி செய்ய முடியும் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்... உனக்கு மிகவும் நன்றி. நீ இங்கேயே இரவு தங்கலாம். காலையிலும் நாம் கோடாலிக் கஞ்சி வைத்துக் குடிப்போம்...