சிறுநீர் கழிக்கும்போது மயக்கத்திற்கு சிகிச்சை
29 Nov,2025
கடந்த வாரம் எம்முடைய நண்பர் ஒருவர் இரவு நேரத்தில் சிறுநீர் கழித்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயக்கமடைந்தார். பதறிப்போன அவருடைய உறவினர்கள் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக வைத்தியர்கள் விவரிக்கும் போது மெச்சுரிஸன் சிங்கொபி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும், இதற்கு உரிய சிகிச்சையை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக எம்மில் பலரும் பல்வேறு தருணங்களில் திடீரென்று மயக்கம் ஏற்படக்கூடும். ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றம் அல்லது இயல்பான அளவைவிட குறைவாக இருந்தால் அதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படக்கூடும். பொதுவாக வயதானவர்கள் குறிப்பாக ஆண்கள் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு செல்லும் போது இது போன்ற திடீர் மயக்கத்திற்கு ஆளாவார்கள். இதனை மருத்துவ மொழியில் பிரத்யேகமாக மெச்சுரிஸன் சிங்கொபி என குறிப்பிடுவார்கள்.
இதற்கான காரணங்கள் துல்லியமாக அவதானிக்கப்படவில்லை என்றாலும்... இயல்பான அளவைவிட அதிகமாக மது அருந்துதல், நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, பசி , சுவாசத் தொற்று, புரோஸ்டேட் பிரச்சனை.. என பல்வேறு காரணிகளையும் இதற்கான காரணங்களாக குறிப்பிடலாம்.
இது இயல்பான நிலை அல்ல. அதனால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டும். சிலருக்கு அவர்கள் நிவாரணத்திற்காக பாவித்து கொண்டிருக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளின் பக்க விளைவின் காரணமாகவும் இத்தகைய நிலை ஏற்படக்கூடும்.
இதனால் இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியதாக இருந்தால்.. படுக்கையில் இருந்து திடீரென எழுவதை விட.. படுக்கையின் விளிம்பில் சில வினாடிகள் அமர்ந்து உங்கள் கால்களை அசைத்து, தலைவலி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு செல்லலாம். இது ஒரு முதலுதவி நிவாரணம் என்றும் குறிப்பிடலாம்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பாதிப்பிற்குரிய காரணம் என்ன? என்பதை பிரத்யேக பரிசோதனைகள் மூலம் துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற வகையினதான மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பார்கள்.