அம்மாவின் சடலத்துடன் 6 ஆண்டுகளாக வாழ்ந்த 60வயது மகன்.. இத்தாலியில் பகீர் சம்பவம்
31 May,2023
ஆறு ஆண்டு காலத்தில் 1.56 லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.56 கோடி பென்ஷன் தொகையை ஹெல்காவின் மகன் பெற்று பயன்படுத்தியுள்ளார்.
பென்ஷன் பணத்திற்காக தனது தாயின் இறந்த சடலத்துடன் ஒரு நபர் 6 ஆண்டுகள் வசித்து வந்த பகீர் சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. இத்தாலி நாட்டின் வொரோனா பகுதியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். ஹெல்காவுடன் அவரது மகனும் வசித்து வந்துள்ளார்.
தாய் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் இதை ரகசியமாக மறைத்து விட வேண்டும் என திட்டம் போட்டுள்ளார். காரணம் ஹெல்காவுக்கு மாதம் தோறும் கிடைத்து வந்த பென்ஷன். ஹெல்கா மறைந்த நிலையில், தனது தாயின் பென்ஷன் பணத்தை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் பலே திட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே சடலம் வைக்கும் பையில் சுற்றி வைத்துவிட்டார்.
அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என தங்கள் பூர்வீக ஊரான ஜெர்மனிக்கு ஹெல்கா சென்றுவிட்டார் என கதை அளந்து விட்டுள்ளார். இவ்வாறு ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹெல்காவின் பென்ஷன் பணத்தை அவரது மகன் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இத்தாலிய நாட்டு அதிகாரிகளுக்கு ஹெல்கா தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக ஹெல்கா எந்தவித சுகாதார அட்டைகளையும் பயன்படுத்தவில்லையே, கோவிட்-19 காலத்தில் கூட தேவைப்படவில்லையே அது எப்படி என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கடந்த மே 25ஆம் தேதி அன்று ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது தான் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஹெல்காவின் இறந்த சடலத்துடன் அவரது மகன் 6 ஆண்டுகள் அதே வீட்டில் வசித்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இந்த ஆறு ஆண்டு காலத்தில் 1.56 லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.56 கோடி பென்ஷன் தொகையை ஹெல்காவின் மகன் பெற்று பயன்படுத்தியுள்ளார். இத்தாலி காவல்துறை ஹெல்காவின் மகனை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது.