மொரோக்கோ வீரர்களின் கொண்டாட்டத்தை குரங்குகளுடன் ஒப்பிட்டமைக்காக டென்மார்க் மன்னிப்பு கோரியது
22 Dec,2022
மொரோக்கோ கால்பந்தாட்ட வீரர்கள், கத்தாரில் தமது குடும்பத்தினருடன் குறிப்பாக தாய்மாருடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை, டென்மார்க் தேசிய தொலைக்காட்சியில் ஊடவியலாளர் ஒருவர் குரங்குகளுடன் ஒப்பிட்டமைக்காக அத்தொலைக்காட்சி மன்னிப்பு கோரியுள்ளது.
டென்மார்க் அரச தொலைக்காட்சியான TV 2 நிறுவனமே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டியொன்றில், போர்த்துகலை தோற்கடித்து அரை இறுதிப் போட்டிக்கு மொரோக்கோ அணி, முன்னேறியது. இவ்வெற்றியின் பின்னர் மொரோக்கோ வீரர்கள் சிலர் அவர்களின் தாய்மாருடன் நடனமாடி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டென்மார்க் அரச தொலைக்காட்சியான TV 2 அலைவரிசையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில், கத்தார உலகக் கிண்ண ஆட்டங்களில் வெற்ற மொரோக்கோ வீரர்கள் தமது தாய்மார்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசப்பட்டது.
அதன்பின் ஊடகவியலாளர் கிறிஸ்டியன் ஹோக் அண்டர்சன், குரங்குகள் நெருக்கமாக காணப்படும் புகைப்படமொன்றைக் காட்டி, கத்தாரில் மொரோக்கோ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தொடர்பான தகவல்களுக்கு மேலதிகமாக, உஷ்ணத்துக்காக குடும்ப ஒன்றுகூடலில் ஈடுபட்ட மிருகக் குடும்பமொன்றும் உள்ளது எனக் கூறினார்.
முன்னர் கூறப்பட்ட மொரோக்கோ வீரர்கள் தொடர்பான செய்திக்கும், குரங்குகளின் குடும்பத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து மற்றொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அவை (குரங்குகள்) இணைந்திருக்கின்றன. கத்தாரிலும் மொரோக்கர்கள் குடும்ப மீள் இணைவின்போது அதை செய்தனர்' என அண்டர்சன் பதிலளித்தார்.
இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து TV 2 நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
"வீரர்கள் தொடர்பான செய்தியையும் குரங்குகள் தொடர்பான அடுத்த செய்தியையும் தொடர்புபடுத்தினார். இது இனவாத கருத்தாக கருதப்படலாம். TV 2மற்றும் கிறிஸ்டியன் ஹோக் அண்டர்சனம் மன்னிப்பு கோருகின்றனர்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் அண்டேர்சனும் மேற்படி கருத்து தொடர்பாக தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.