படிக நீல நிற நீர் கொண்ட ஏரிகள் பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான். புவி வெப்பமடைதலால் ஏற்படும் நீர் வெப்பநிலை உயர்வதால், பாசிகள் பூத்து, ஏரிகளை பச்சை நிறமாக மாற்றி வருகிறது.
காலநிலை மாற்றத்தால் இயற்கையின் பல அங்கங்கள் தங்கள் உருவயியல் மாற்றத்தை சந்தித்து வருகின்றன. நில அமைப்புகள், தாவரங்கள், விலங்குகள் என எல்லாவற்றிலும் இந்த மாறுதல் தெரிகிறது. வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் அதிகளவில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ப்ளூ டிட் போன்ற சில பறவைகள், உயரும் வெப்பநிலையால் ஏற்படும் உடலியல் அழுத்தத்தின் காரணமாக ஏற்கனவே நிறத்தை மாற்றத் தொடங்கியுள்ளன. மேலும், ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் படி, ஏரிகளும் இதேபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடும்.
இதற்காக ஒரு ஆராய்ச்சிக் குழு உலகெங்கிலும் உள்ள 85,360 ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் 5.14 மில்லியன் செயற்கைக்கோள் படங்களை நீர்நிலைகளின் பொதுவான நீரின் நிறத்தை தீர்மானிக்க பயன்படுத்தியது. ஒரு ஏரியின் நிறம் பருவம் மற்றும் பாசிகளின் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும் என்பதால், இந்த ஆய்வு குழு 2013 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட ஏழு ஆண்டு காலப்பகுதியில் இந்த ஏரிகளின் நிறத்தை பகுப்பாய்வு செய்யதது.
நீல ஏரிகள் உலகின் ஏரிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று ஆய்வு காட்டுகிறது. அவை மிகவும் ஆழமானவை. பொதுவாக குளிர்ந்த காலநிலை கொண்ட உயரமான பகுதிகளில் அமைந்துள்ளன. மீதமுள்ள ஏரிகள் பெரும்பாலும் பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ளன (ஆய்வு செய்யப்பட்ட அனைத்து நீர்நிலைகளிலும் 69%). அவை வறண்ட காலநிலையிலும், குறைந்த உயரத்திலும், கடற்கரையிலும் காணப்படுகின்றன.
ஆய்வின் படி சில ஆண்டுகளில் நீல ஏரிகளின் சதவீதம் அதிக அளவில் குறையக்கூடும். குறிப்பாக கனடாவின் வடகிழக்கில், ஐரோப்பாவின் வடக்கில் மற்றும் நியூசிலாந்தில், உள்ள ஏரிகள் பெரிதும் பாதிப்படையும். நீரின் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பாசிகளின் பெருக்கம் ஆகியவற்றால் இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது.
"அதிகமான பாசிப் பூக்களை உருவாக்கும் சூடான நீர், ஏரிகள் பச்சை நிறங்களை நோக்கி மாற்றும்" என்று இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் சூழலியல் நிபுணரும் ஆய்வின் ஆசிரியருமான கேத்தரின் ஓ'ரெய்லி கூறினார்.
ஆனால் இந்த ஏரிகளின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் அழகியல் விளைவுகளை விட அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இது நீரின் தரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று நாம் ஏரிகளை மீன்வளம், விவசாய நீர் பாசனம், குடிநீருக்காக பயன்படுத்துகிறோம். ஆனால் ஏரியின் தரம் மாறுபட்டால் அது மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறிவிடும்.
ஏரிகளின் நிறம் அல்லது கலவையில் ஏற்படும் மாற்றங்கள் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற வடக்கு ஐரோப்பிய நாடுகளில், குளிர்காலத்தில் உறைந்த ஏரிகள் ஸ்கேட்டர்களிடையே பிரபலமாக உள்ளன, ஆனால் புவி வெப்பமடைதலின் விளைவாக இவை அரிதாகிவிடும்.