திருப்பத்துார் அருகே, கள்ளக்காதலால் பிரிந்த கணவரை கூலிப்படை மூலம் தீர்த்துக் கட்டிய மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அன்பழகன், 45. டிராக்டர் டிரைவர். இவர் மனைவி சரிதா, 36. மகன்கள் தென்னரசு, 21, பூவரசு, 22. இவர்கள் துபாயில் பணியாற்றி வருகின்றனர்.
சரிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்திக்கும், 45, கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அன்பழகனும், சரிதாவும் 2000ம் ஆண்டு முதல் பிரிந்தனர்.
சரிதா எம்.ஜி.ஆர்., நகரில் கள்ளக்காதலுடனும், அன்பழகன் காட்டுக்கொல்லையிலும் வசித்து வந்தனர். கடந்த 5 ம் தேதி காட்டுக்கொல்லையில் உள்ள நிலத்தில் அன்பழகன் பிணமாக கிடந்தார்.நாட்றம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அன்பழகன் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.சந்தேகத்தின் பேரில், அன்பழகன் மனைவி சரிதாவிடம் விசாரணை நடத்தினர். அதில், கூலிப்படை மூலம் கணவரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் கூறியதாவது:கள்ளக்காதல் விவகாரத்தினால் அன்பழகனும், சரிதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் சரிதாவின் மீது வெறுப்படைந்து வெளிநாட்டில் பணியாற்றி வந்த அவரது மகன்கள் தென்னரசு, பூவரசு ஆகியோர் தந்தையான அன்பழகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தனர்.அதை கொண்டு அவர் காட்டுக்கொல்லையில் புதியதாக வீடு கட்டிக் கொண்டிருந்தார். தன் மகன்கள் அனுப்பும் பணத்தில் பாதியை தன்னிடம் கொடுக்கும்படி ஊர் பஞ்சாயத்தில் சரிதா முறையிட்டார்.
கள்ளக்காதலை கை விட்டால் பணத்தை வாங்கித் தருவதாக பஞ்சாயத்தார் கூறிவிட்டனர். ஆனால் கள்ளக்காதலை கைவிட சரிதா மறுத்து விட்டார்.இதனால் கணவர் அன்பழகனை தீர்த்துக்கட்ட சரிதா முடிவு செய்தார். இதற்காக சரிதாவின் தந்தை சின்னபையன், 66, ஏற்பாட்டின் பேரில் கூலிப்படையை சேர்ந்த ஜெயபுரம் காலனி குமார், 39, அரவிந்தகுமார், 25, ராமநாயக்கன்பேட்டையை சேர்ந்த சந்திப், 19, ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டனர்.
அன்பழகனை கொலை செய்ய கூலிப்படையினர் 5 லட்சம் ரூபாய் கேட்டனர். பிறகு பேரம் நடந்து கடைசியில் 3 லட்சம் ரூபாய்க்கு கொலை செய்ய ஒப்புக் கொண்டதால், 50 ஆயிரம் ரூபாய் முன் பணமாக சரிதா கூலிப்படையினருக்கு கொடுத்தார்.
கடந்த 5 ம் தேதி காலை 8:00 மணிக்கு காட்டுக்கொல்லைக்கு சென்ற கூலிப்படையினர், மப்ளர் மூலம் அன்பழகனின் கழுத்தை இறுக்கியும், கம்பால் அடித்தும் கொலை செய்தனர்.
பிறகு பாக்கி 2.50 லட்சம் ரூபாயை சரிதாடம் வாங்கிக் கொண்டு தலைமறைவாயினர்.
அன்பழகன் கொலையில், கூலிப்படையை சேர்ந்த குமார், அரவிந்தகுமார், சந்திப், மற்றும் சரிதா, அவரது தந்தை சின்னபையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.