'சதுரங்க வேட்டை' பட பாணியில் 2 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை, போலீசார் கைது
24 Dec,2021
மதுரையை சேர்ந்த பாலமுருகன்-இந்திரா பானுமதி தம்பதியினர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, பெத்தானியபுரம் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் தங்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தால், நிதி பங்கீடு வழங்கப்படும் என்று அறிவித்து ஏராளமான உறுப்பினர்களை சேர்த்த தம்பதியினர், தொடக்க காலத்தில் சில உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி உள்ளனர்.
அடுத்து பலான மேட்டருக்கு சூப்பரான மருந்து என்று ஆசை காட்டி கணவனுடன் சேர்ந்து மதுரையை சேர்ந்த இந்திரா வாடிக்கையாளர்களை ஏமாற்றி இருக்கிறார். மருந்துகளை விற்பனை செய்ய ஆர்வம் உடையவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து இதில் கிடைக்கும் லாபத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு பங்கீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் இங்கு பலான மேட்டருக்கு மருந்துகளும் கிடைக்குமென்று கூறிய நிலையில் இதனை பல ஆண்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்க முன் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் முகவராக விரும்புவோர் குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்த வேண்டும். உங்களின் தொகையில் 75 சதவீதம் மதிப்பு உடைய பொருட்கள் வழங்கப்படும். இந்த தொழிலில் மேலும் ஒருவரை சேர்த்துவிட்டால் அதற்காக உங்களுக்கு 20 சதவீதத்திற்கும் மேல் கமிஷன் வழங்கப்படும். எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் சேர்த்து விடுபவர்களுக்கும் கமிஷன் தொகை கூடுதலாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 20 பேரை சேர்த்து விட்டால் அதன் பிறகு நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் பணத்தைக் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம். இது பலான மேட்டர் சம்பந்தப்பட்டது என்பதால் அவர்களால் இதனை பகிரங்கமாக வெளியில் கூற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஆயுர்வேத மருந்துகளும் அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் ஈஸ்வரி என்பவர் இந்த ஆயுர்வேத மருந்து நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து இருக்கிறார். அவர் இணையும்போது உரிய பங்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் அந்த கும்பல் மோசடி செய்துள்ளனர்.
இதனையடுத்து ஈஸ்வரி மதுரையில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் அதனுடைய பங்குதாரர்கள் உட்பட 5 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் போலீசார் இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். அப்போது பாரத மாதா நிதி நிறுவனத்தை சேர்ந்த பாலமுருகன், இந்திரா பானுமதி, விஸ்வா, ஹரிஹரன் ஆகிய 4 பேர் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாலமுருகன் மற்றும் இந்திரா பானுமதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மதுரையில் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் ரூ.2 கோடி மோசடி சம்பவம் அரங்கேற்றியது மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.