சென்னையில் ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குளிர்பானக் கடை நடத்தி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
` இரண்டு பெண்களோடு ஏற்பட்ட தவறான நட்பின் காரணமாக, அவர்களுக்கு வேண்டிய சிறுமிகளை இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’ என்கின்றனர் காவல்துறையினர்.
சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பான் வகைகளை வியாபாரம் செய்யும் கடைகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் அருகில் உள்ள ஆர்.வி.நகரில் செயல்பட்டு வரும் பெட்டிக் கடையொன்றில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்து முப்பது கிலோவுக்கும் அதிகமான குட்கா வகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான பெருமாள் (48) என்பவரை டி.பி.சத்திரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையின்போது, `உனக்கு குட்கா சப்ளை செய்யும் நபர்கள் யார்?’ என கேட்டதற்கு பெருமாள் பதில் சொல்லவில்லை.
இதையடுத்து, அவரது செல்போனை தருமாறு கேட்டும் அவர் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், பெருமாளின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
அதில், சிறுமிகள் சிலரை பெருமாள் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அது குறித்து தங்களின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மூலமாக குழந்தைகள் நல ஆணையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒன்பது சிறுமியிடம் பெண் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிறுமியின் தாய் ஷீலாவுடன் (30) கடந்த சில வருடங்களாக பெருமாள் தவறான தொடர்பில் இருந்ததும் இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சகோதரியான மாலா என்பவருடனும் பெருமாள் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தாயின் ஒன்பது வயது மகளுக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவிக்காமல் பெருமாளிடம் பணம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், சிறுமியின் வீட்டுக்கு வந்த 17 வயது, 11 வயது மற்றும் 4 வயதுடைய 4 சிறுமிகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு பெருமாள் ஆட்படுத்தியுள்ளது தெரியவந்தது.
அவர்களை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இரண்டாயிரம் ரூபாய் வரையில் சிறுமிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பெருமாள், சிறுமியின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
டி.பி.சத்திரம் பகுதியில் மிகவும் அமைதியானவராகப் பார்க்கப்பட்ட பெருமாளின் நிஜ முகம் அதிர்ச்சியூட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.