மனைவியை திட்டம்போட்டு கொலை செய்த கணவன்.
23 Jul,2021
.
தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் கூலிப்படை ஏவி கொலை செய்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவார் உப்பினக்கோட்டை பகுதியை சார்ந்தவர் இராமகிருஷ்ணா. இவரது மனைவி விசாலா (வயது 35). இவர்கள் 2 பேரும் துபாயில் வசித்து வந்துள்ளனர். இராமகிருஷ்ணனுக்கும் – அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், இதனை சரி செய்ய கடந்த 10 ஆம் தேதி துபாயில் இருந்து இராமகிருஷ்ணா – விசாலா உடுப்பிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் விசாலா கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பிரம்மவார் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், விசாலாவை செல்போன், மடிக்கணினி வயரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்த உடுப்பி காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இராமகிருஷ்ணனும் – விசாலாவும் சொத்து பிரச்சனை காரணமாக துபாயில் இருந்து வந்ததால், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில், இராமகிருஷ்ணாவின் நடவடிக்கையில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, அவரை கைது செய்து விசாரணை செய்கையில் சொந்த மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வாக்குமூலத்தில், ” துபாயில் வசித்து வந்த விசாலா – இராமகிருஷ்ணா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இராமகிருஷ்ணா தனது மனைவி விசாலாவை அடிக்கடி தாம்பத்தியத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் விசாலா மறுப்பு தெரிவிக்கவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேல் கெஞ்சி பார்த்த இராமகிருஷ்ணா மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது திட்டப்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்த நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கூலிப்படையை சார்ந்த நபர்களுக்கு ரூ.2 இலட்சம் முன்பணம் வழங்கப்பட்டு, மனைவி மற்றும் அவர் தங்கியிருக்கும் வீடு தொடர்பான அனைத்து விபரத்தையும் இராமகிருஷ்ணா வழங்கியுள்ளார்.
மேலும், சொத்து தகராறு தொடர்பான விஷயத்தை காரணமாக வைத்து, திட்டமிட்டே மனைவியை உடுப்பிக்கு அழைத்து வந்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படை கும்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாலாவை கழுத்தை இறுக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இராமகிருஷ்ணா கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையை சார்ந்த ஷமி நிஷார்த் எனபவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய பிறரை தேடி வருகின்றனர்.