லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது.
இந்த வரிசையில், லடாக்கின் வெவ்வேறு இடங்களைப் பற்றி தினசரி செய்திகள் வெளிவருகின்றன.
இந்திய இராணுவம் கைலாய மலையையும் மானசரோவரையும் கைப்பற்றியதாக சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, கூறப்பட்டு வருகிறது.
இது பற்றிய செய்திகள் தினமும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த செய்தியுடன் ஒரு படமும் பகிரப்பட்டு வருகிறது. கைலாய மலையில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை அசைப்பதை பார்க்கமுடிகிறது.
இந்தியாவுடன் சேர்ந்த பிறகான கைலாய மலையின் படங்கள் இவை என்று கூறப்படுகிறது.
இந்தப் படம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்க்ஷியின் ட்விட்டர் கணக்கிலிருந்தும் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய இராணுவம் கைலாய மலையை கைப்பற்ற அதை நோக்கி நகர்வதாக அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த ட்வீட் மூவாயிரத்திற்கும் அதிகமான தடவைகள் மறு ட்வீட் செய்யப்பட்டது.
கைலாய மலையின் கைப்பற்றல் பற்றிய இந்த செய்தி இத்துடன் நிற்கவில்லை.
இதன் பின்னர், சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை சித்தரித்து பல பயனர்கள், இந்திய இராணுவம் கைலாய மலைத்தொடரை கைப்பற்றியுள்ளதாக ட்வீட் செய்துள்ளனர்.
உண்மை என்ன?
வீரர்கள் மூவர்ணக்கொடியை அசைக்கின்றனர். பின்னால் கைலாய மலை தெரிகிறது. இந்தப் புகைப்படம் பற்றி முதலில் பார்ப்போம்.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் இந்த படத்தை நாங்கள் தேடியபோது, வீரர்கள் கொடி அசைக்கும் படங்கள் எங்களுக்கு பல இடங்களில் கிடைத்தன. ஆனால் அவற்றில் கைலாய மலை, பின்னணியில் காணப்படவில்லை.
2020 ஜனவரி 26 அன்று இந்தியா டுடே இணையதளத்தில் ஒரு படத்தொகுப்பில் இந்த படம் பயன்படுத்தப்பட்டது. மேலும் 71வது குடியரசு தினத்தன்று ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்.ஓ.சி.யில் குழந்தைகள் மற்றும் வீரர்கள் இந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது அதில் விவரிக்கப்படிருந்தது.
ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது, அதே 9 வீரர்களின் படம் , ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் காணப்பட்டது. அதில் ஐந்தாவது வீரரின் கையில் மூவர்ணக்கொடி இருந்தது. இந்த படம் ஜூன் 17ஆம் தேதி பகிரப்பட்டது.
யான்டெக்ஸ் தேடல் போர்டல் மூலம் நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, இந்தப்படம் 2020 ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஒரு யூடியூப் வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கைலாய மலையில் வீரர்களின் கொடியசைப்பு படத்தையும், இந்தப் படங்களையும் ஒப்பிடும்போது , அவற்றில் உள்ள பின்னணியைத் தவிர மீதி எல்லாமே ஒன்றுதான். வீரர்களின் படத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கைலாய மலை பின்னணியில் நிறுவப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் மேற்கோள் காட்டப்பட்டு, கைலாய மலைத்தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.
கைலாய மலைத்தொடர் இந்திய எல்லைக்குள் இல்லவே இல்லை என்று தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் டெல்லி பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
"மேற்கு திபெத்தின் டிரான்ஸ் இமயமலையில் கைலாய மலை உள்ளது. கைலாய மலைத்தொடரில் கைலாய மலை அமைந்துள்ளது. இது லடாக் மலைத்தொடரின் முடிவிற்குப் பிறகு ஆரம்பமாகிறது. லடாக்கில், உயர் இமயமலையின் லடாக் மலைத்தொடர் மட்டுமே உள்ளது. இது மேற்கு திபெத் சென்று முடிந்துவிடுகிறது. அங்கிருந்து கைலாய மலைத்தொடர் ஆரம்பமாகிறது," என்று பேராசிரியர் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் இப்போது எங்கே உள்ளது?
லடாக்கில் எல்.ஏ.சி தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே வரிசையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 அன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் எத்தனை சீன வீரர்கள் இறந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சீனாவின் குளோபல் டைம்ஸ், ஜூன் 15 மோதலில் சீனாவுக்கு சேதம் ஏற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் பின்னர், ஆகஸ்ட் 29-30 இரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டதாக, இரு நாடுகளுமே ஒன்று மற்றதன் மீது குற்றம் சாட்டியுள்ளன.
எல்.ஏ.சி அதாவது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு அருகே மற்றும் அந்த நாட்டின் உள்ளேயும் சீனா பெரும் எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தியுள்ளதாகவும், ஏராளமான வெடிப்பொருட்களை குவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை மக்களவையில், கூறினார்.
கூடவே எல்லை பதற்றம் குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை அவர் ஒரு அறிக்கையை அளித்தார். லடாக்கில் இந்தியா ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அந்த சவாலை நாடு எதிர்கொள்ளும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பகுதியில் எந்த மாற்றத்தை பற்றியும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியா எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை என்பதை இது காட்டுகிறது.
கைலாய மலையைப் பற்றி கூறப்பட்ட படங்கள் முற்றிலும் போலியானவை என்றும், இந்திய வீரர்கள் கைலாய மலையை கைப்பற்றவில்லை என்றும் உண்மை கண்டறியும் ஆய்வில் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.