செக்ஸ் வேண்டாம்ஸ செல்போனே போதும்!
06 Feb,2020
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட கையில் மொபைலோடுதான் போகிறார்கள். மொபைல், கிட்டத்தட்ட ஆறாவது விரல் ஆகிவிட்டது. மொபைலைக்
காணவில்லை என்றால் இவர்களை பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளும் ஸ்மார்ட்போன், மனிதனின் பாலியல் வாழ்க்கையையே அழித்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலைச் சொல்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு.
ஸ்மார்ட்போன் காரணமாக பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக 60 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் செல்போன், ஆரோக்கியத்தை சீரழிப்பதாக ஆய்வுகள் பல எச்சரித்திருந்தாலும், தற்போது இவை மக்களின் பாலியல் வாழ்க்கையையும் அழித்து வருவதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
சர்வதேச பல்கலைக்கழக மருத்துவமனையின் பாலியல் சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் காரணமாக தங்கள் பாலியல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.இந்த ஆய்வின் அறிக்கையின்படி, பங்கேற்றவர்களின் பாலியல் செயல்பாட்டை சோதித்ததில், பங்கேற்பாளர்கள் 600 பேரும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தனர். அவர்களில் 92 சதவீதம் பேர் இரவில் அவற்றைப் பயன்படுத்துவதை கூறியுள்ளனர்.
இவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே, தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் போட்டு தங்கள் படுக்கையறைகளில் வைக்கின்றனர். இவர்களில் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடத்தில் ஸ்மார்ட்போன்கள் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் தங்களது பாலியல் செயல்பாட்டை தொந்தரவு செய்ததாகவும் கூறுகின்றனர்.
நேர்முகத் தேர்வாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் தங்களது மொபைல் பயன்பாட்டுக்கு ஒதுக்கும் நேரத்தைவிட, பாலியல் வாழ்க்கைக்கு ஒதுக்கும் நேரம் மிகமிகக் குறைவு என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய இன்னோர் சர்வேயின் அடிப்படையில், இளைய தலைமுறையினரில் 17 சதவீதம் பேர் தங்களது செக்ஸ் செயல்பாட்டுக்கு நடுவிலும் கூட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
ஏறக்குறைய முக்கால்வாசிப்பேர் இரவு தூங்கும்போது தலையணைக்கடியிலோ அல்லது படுக்கைக்கு பக்கத்திலோ தங்களது செல்போன்களை வைத்துக் கொண்டுதான் தூங்குகிறார்கள். அப்படி செல்போன் தங்களுக்கு அருகில் இல்லாவிட்டால், தங்களுக்கு ஒருவித பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்வதோடு தங்களது வாழ்க்கையில் ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதியும் ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். துணையைக்காட்டிலும், ஸ்மார்ட்போன்கள் தங்களை கவர்வதாகவும் சொல்கிறார்கள்.இதில் இருக்கும் ஒரே ஆறுதலான, மகிழ்ச்சியான செய்திஸ செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டால் தங்கள் பாலியல் செயல்பாடு உற்சாகமாக இருப்பதையும் பலர் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது மட்டுமே!
இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!
பொதுமக்களிடம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையதளம் பயன்பாடு அதிகரித்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் மருத்துவமனைக்கே வருகிறார்கள். இது ஒருவிதத்தில் எங்களுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. ஆனால்ஸ’ – சமீபகாலமாக டாக்டர்கள் அதிகம் சொல்கிற விஷயம் இது.
இணையதள தேடல் பற்றி டாக்டர்கள் சொல்வதை கடைசியில் பார்ப்போம். அப்படி என்னதான் பொதுமக்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று 2019-ம் ஆண்டின் அடிப்படையில் கூகுள் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. முதலில் பருவகால ேநாய்கள் பற்றி மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். சாதாரண சளி, இருமலிலிருந்து அவ்வப்போது அச்சுறுத்தி வரும் டெங்கு வரை தேடுவது அடிப்படையாக இருக்கிறது. பலர் பிரபலங்களைத் தாக்கியிருக்கும் நோய்கள் பற்றியும் ஆர்வமாகப் படிக்கிறார்கள்.
தீபிகா படுகோனேவுக்கு வந்த மன அழுத்தமாக இருந்தாலும் சரிஸ சல்மான்கானுக்கு ஏற்பட்டிருக்கும் டிரைஜெமினல் நியூரால்ஜியாவாக இருந்தாலும் சரிஸ பிரபலங்களுக்கு ஏற்படும் நோயும் இதனால் சமூகத்தில் பிரபலமாகிவிடுகிறது. இதேபோல் சமகால நாட்டு நடப்புகளை அதிகம் தேடுகிறார்கள். கடந்த ஆண்டு லிச்சி பழத்தால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது, உயிரிழப்புகள் நடக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகி எல்லோரையும் உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக மூளைக்காய்ச்சல் பற்றியும், லிச்சி பழம் பற்றியும் அதிகம் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதைப் போலவே, நீரிழிவு நோயும் பெருகிவிட்டது என்பது தெரிந்ததுதான். இதனால், நீரிழிவு நோய் குறித்த தேடல்களும் லட்சக்கணக்கில் நீள்கின்றன.
இந்த தேடல் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?‘ஒரு நோய் பற்றிய அறிகுறிகளைப் படிக்கும்போது, இல்லாத நோயும் நமக்கு ஏற்பட்டிருப்பது போன்ற மாயையை உண்டாக்கும். இதனால் இணையதள தரவுகள் அடிப்படையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயினைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். மருத்துவம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், Update ஆகாத பழமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் சாத்தியம் உண்டு. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்துக்கு சாதகமான அறிக்கைகளையும் வெளியிடுகின்றன.
அவற்றை நீங்கள் நம்பிவிடக் கூடும். நோய் குறித்த அதீத கவலையும் தவறான வழியில் உங்களை திசை திருப்பலாம். எனவே, இணையதள தேடுதலில் எச்சரிக்கை அவசியம்’ என்பதே மருத்துவர்கள் கூற விரும்பும் முக்கிய ஆலோசனை!‘ஒரு மருத்துவர் உங்களை நேரடியாக ரத்தமும், சதையுமாக பரிசோதிக்கும்போது மட்டுமே நோயின் தன்மை முழுமையாகப் புரிய வரும். நீங்கள் ஒரு ‘க்ளிக்’கில் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு நோய் பற்றி, மருத்துவர்கள் வருடக்கணக்கில் கல்லூரியில் படிக்கிறார்கள். எத்தனையோ நோயாளிகளை தங்கள் அனுபவங்களிலும் பார்க்கிறார்கள். அதனால் உங்களுடைய சந்தேகங்களையும், மருத்துவ அறிவையும் விவாதிக்கப் பயன்படுத்துங்கள். அது மருத்துவரின் நேரத்தை வீணாக்குவதாகவோ, விதண்டாவாதம் பேசுவதாகவோ மாறிவிடக் கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்’ என்பதும் மருத்துவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.