’எல்லோருக்கும் ஒரே இறைவன்' என்ற சாய்பாபாவின் பிறந்த இடம் எது என்பதில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சாய்பாபா பிறந்த இடமாகக் கருதப்படும் பாத்ரியின் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. ஆனால், சாய்பாபா பிறந்த இடம் பாத்ரி என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, ஷீரடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பந்த் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு பதிலடியாக பாத்ரி மக்களும் கூட இதுதொடர்பாக பந்த் அறிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாய்பாபா தங்கள் கிராமத்தில் தான் பிறந்தார் என்று பாத்ரி மக்கள் கூறுகின்றனர். அதற்கு 29 ஆதாரங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். ஆதாரங்கள் என அவர்கள் கூறும் 29 விஷயங்களில் ஒன்றையாவது காட்ட வேண்டும், இல்லாவிட்டால் அவை வெறும் அனுமானம் என்றாகிவிடும் என்று ஷீரடி மக்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஜனவரி 20 ஆம் தேதி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்ததும், இந்த பிரச்சனை தீர்க்கப்படும். ஆனால், இந்த சர்ச்சை எங்கே தொடங்கியது என்று பார்ப்போம்.
பாத்ரியில் பிறந்தார் என்று எப்படி உரிமை கோருகிறார்கள்?
ஔரங்கபாத் நகரில் இருந்து நான்டெட்டுக்கு நீங்கள் ரயிலில் சென்றால், மன்வட் சாலை என்ற ரயில் நிலையத்தைப் பார்ப்பீர்கள். அங்கு பல ஆண்டுகளாக ஓர் அறிவிப்புப் பலகை உள்ளது: `சாய்பாபா பிறந்த இடத்தைப் பார்க்க இங்கே இறங்கவும்' என்று அதில் எழுதியிருக்கும். ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாத்ரியில் வாழ்பவர்களும், அந்தப் பகுதியில் வாழும் மற்றவர்களும் பாத்ரி தான் சாய்பாபா பிறந்த இடம் என்று நம்புகின்றனர்.
பாத்ரியில் உள்ள `சாய்பாபா ஜன்மஸ்தல மந்திர் டிரஸ்ட்’டின் தலைவர் அட்டுல் சௌத்ரியிடம் இதற்கான ஆதாரம் பற்றிக் கேட்டதற்கு, ``சாய்பாபா 1868ல் பாத்ரியில் பிறந்தார். முன்னாள் முதல்வர் பாலாசாஹேப் கேரின் மகன் விஸ்வாஸ் கேர் முப்பது ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு, பாத்ரி தான் சாய்பாபா பிறந்த இடம் என்று கூறியுள்ளார்'' என்று தெரிவித்தார்.
``பாத்ரிக்கு அருகே உள்ள சேலு கிராமத்தில் கேசவ்ராஜ் மகராஜ் என்கிற பாபாசாஹேப் மகராஜின் கோவில் உள்ளது. அந்த பாபாசாஹேப் தான் சாய்பாபாவின் குரு என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார் அவர்.
``கோவிந்த் டபோல்கர் எழுதி ஷீரடி சாய் சன்ஸ்தான் டிரஸ்ட் (ஷீரடி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை) மூலம் 1974ல் வெளியிடப்பட்ட சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றின் எட்டாவது பதிப்பில், சாய்பாபா பத்ரியில் பிறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னை குருமார் ஒருவருக்கு தனது பெற்றோர்கள் தானமாக அளித்துவிட்டார்கள் என்று தன் சீடர் மஹல்சபதியிடம் சாய்பாபா கூறியுள்ளார்'' என்று சௌத்ரி குறிப்பிடுகிறார்.
``சாய்பாபாவின் உண்மையான பெயர் ஹரிபாவ் பூசாரி. அவருடைய மூத்த சகோதரரும் துறவி தான். எனவே சகோதரரின் தாக்கம் சாய்பாபாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். பத்ரி கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதன் வரலாற்றில் நிறைய முஸ்லிம் குருமார்கள் இருந்திருக்கிறார்கள். அவை பற்றிய செய்திகள் எல்லாம் வெளியாகி இருந்தால், பாத்ரி கிராமம் உலக வரைபடத்தில் இடம் பிடித்திருக்கும். அந்த மத குருமார்களின் தாக்கம் சாய்பாபாவிடம் ஏற்பட்டிருக்கும். அதனால் தான் சாய்பாபாவின் உடை முஸ்லிம் மத குருமார் போல இருக்கிறது'' என்று அவர் கூறுகிறார்.
துறவி தாஸ்கனு எழுதிய வாழ்க்கை வரலாற்றிலும் சாய்பாபா பிறந்தது பாத்ரியில் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
`எட்டாவது பதிப்பு எங்கே?'
எட்டாவது பதிப்பை ஆதாரமாக வைத்து தான் சாய்பாபா பிறந்தது பாத்ரியில் என்று அந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர். ஆனால் ஷீரடி சன்ஸ்தனின் தொகுப்புகளில் அந்தப் புத்தகத்தின் எட்டாவது பதிப்பு இல்லை என்று ஷீரடி சன்ஸ்தான் தலைவர் சுரேஷ் ஹவாரே கூறுகிறார்.
``விஸ்வாஸ் கேர் காலத்தில் அச்சிடப்பட்ட எட்டாவது பதிப்பை ஆதாரமாக வைத்து தான் பத்ரி வாழ் மக்கள் கூறுகின்றனர். முந்தைய பதிப்புகளில் அதுபோல எதுவும் இல்லை. இப்போது விற்பனையில் உள்ள 36வது பதிப்பிலும் அதுபோல எதுவும் இல்லை. டபோல்கர் எழுதிய கைப்பிரதியும் எங்களிடம் உள்ளது. அதிலும் அப்படி எதுவும் இல்லை. எனவே எட்டாவது பதிப்பில் மட்டும் அது எப்படி வந்திருக்கும்'' என்று ஹவாரே கேள்வி எழுப்புகிறார்.
பாத்ரி மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திராவில் சில இடங்களும் கூட அங்கு தான் சாய்பாபா பிறந்தார் என்று கூறுப்படுகின்றன. சாய்பாபா மீது மக்களுக்கு உள்ள பக்தியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர்களது கருத்தில் வலுவான ஆதாரம் எதுவும் இல்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம் என்கிறார் ஹவாரே.
`சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறை பக்தர்கள் தான் எழுதியுள்ளனர்'
வாழ்க்கை வரலாறு புத்தகங்களை ஆதாரமாக வைத்து சாய்பாபாவின் பிறந்த இடம் எது என்று முடிவு செய்யலாமா? சாய்பாபாவின் வாழ்க்கை பற்றி ஆய்வு நடத்தியவரும், லோகமுத்ரா மாத இதழின் ஆசிரியருமான ராஜா கண்டல்கர், ``சாய்பாபா குறித்த பெரும்பாலான வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் அவருடைய பக்தர்களால் தான் எழுதப்பட்டுள்ளன'' என்று கூறுகிறார்.`வரலாற்றாளர்கள் வலுவான ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் வரலாற்றை எழுதுகிறார்கள்; சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை அவர்கள் வரிசைப்படுத்தி உறுதி செய்கிறார்கள். ஆனால், சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் அது போன்றவை அல்ல. அவற்றை எழுதியவர்களின் நோக்கம் தவறானது என்பது இல்லை, ஆனால் வெளியிடப்பட்ட புத்தகங்களில் தாங்கள் எழுதியுள்ள விஷயங்கள் உண்மையானவையா என அவர்கள் சரி பார்த்ததாகத் தெரியவில்லை'' என்று அவர் கூறுகிறார்.
``அந்த காலக்கட்டத்தில், அகமதுநகரில், `தீனபந்து' வெளியிடப்பட்டுள்ளது. அந்த இதழின் ஆசிரியராக சத்யஷோக் சமாஜத்துடன் தொடர்புடைய செயற்பாட்டாளர் முகுந்த்ராவ் பாட்டீல் இருந்துள்ளார். ஆனால் சாய்பாபா பற்றி அவர் ஒரே ஒரு முறை தான் குறிப்பிட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் வெளியான கேசரி என்ற பத்திரிகையில், சாய்பாபா பற்றி எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. லோகமான்ய திலகரும், மூத்த தலைவர்களும் சாய்பாபாவை சந்திக்க வந்திருக்கிறார்கள் என்று கிராமத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், எழுத்துபூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. சாய்பாபா ஒரு முறை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகியுள்ளார். அப்போதும் கூட, தாம் பிறந்த இடம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னுடைய பெயர் சாய்பாபா என்று அவர் கூறியுள்ளார்'' என்கிறார் கண்டல்கர்.
ராம்நாத் கோவிந்த் பத்ரி சென்றுள்ளார்
இப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2016ல் பாத்ரிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பிகார் மாநில ஆளுநராக இருந்தார் என்கிறார் சௌத்ரி.
சாய்பாபா மறைந்த நூறாவது ஆண்டை ஒட்டி ஷீரடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், `சாய்பாபா பிறந்த பாத்ரி மேம்படுத்தப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். பாத்ரி தான் சாய்பாபா பிறந்த இடம் என்று அவர் கூறியதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
``ராம்நாத் கோவிந்திற்கு யாரோ தவறான தகவலை கூறியுள்ளனர்'' என்று பாஜக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல் கூறியுள்ளார்.
என்ன தீர்வு?
இந்த சர்ச்சைக்குத் தீர்வு காண, கலந்து பேசுவதற்கு பாத்ரி மற்றும் ஷீரடி மக்கள் தயாராக உள்ளனர். ``எங்களிடம் 29 ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களை அரசிடம் சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு அரசு எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை'' என்று சௌத்ரி கூறுகிறார்.
``அரசு தெரியாமல் சாய்பாபா பிறந்த இடம் பாத்ரி என்று கூறிவிட்டது. எனவே, அரசு தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்'' என்று ஹவாரே கூறுகிறார். ``ஆய்வு மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும். இது உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்புடைய விஷயம். எனவே, இதை கவனமாகக் கையாள வேண்டும்'' என்கிறார் ஹவாரே.
ரூ.100 கோடி நிதி என்னவாகும்?
பாத்ரி மேம்பாட்டுக்கு மகராஷ்டிர அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. `இந்த நூறு கோடி ரூபாய் நிதி கோவில் கட்டுவதற்கு மட்டுமே என்று கூறப்படுகிறது' என்று பாத்ரி ஜன்மஸ்தன் நடவடிக்கை கமிட்டியின் தலைவரும், எம்.எல்.சி.யுமான பாபாஜானி துர்ரானி தெரிவிக்கிறார். ``அரசு ரூ.100 கோடி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது என்பது உண்மை. ஆனால், அது தேவேந்திர பட்நாவிஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. இந்த 100 கோடியில், பாதி தொகை இந்த மக்களின் மறுவாழ்வுக்காக செலவிடப்படும். சாய் கோவில் அருகே சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெறும்போது, மக்கள் பலர் இப்போது குடியிருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதற்கு எங்களுக்குப் பணம் தேவை. பக்தர்களுக்கான இடம், உணவு, கழிப்பறை மற்றும் இதர அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் தேவை. பக்தர்கள் தங்குமிடத்துக்கான செலவுக்கு மட்டும் ரூ.10 கோடி தேவை'' என்று அவர் கூறுகிறார்.
பாத்ரிக்கு ரூ.100 கோடி நிதி கிடைக்கவுள்ள நிலையில், ஷீரடி மக்கள் கோபமடைந்துள்ளனர். அதுதான் ஷீரடி பந்த் போராட்டத்துக்குக் காரணமா? இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த ஹவாரே, ``இது முழுக்க முழுக்க தவறான புரிதல். பாத்ரி அல்லது கோவில் மேம்பாட்டுக்காக 100 கோடியோ அல்லது 200 கோடியோ தருவதில் ஷீரடி மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாவிட்டால், அரசு பாத்ரியை சாய்பாபா பிறந்த இடமாக அறிவிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
சாய்பாபாவை இந்துத்வா வளையத்துக்குள் கொண்டு வருகிறார்களா?
சாய்பாபா பிறப்பால் இந்து என்று கூறுவதன் மூலம் அவரை இந்துத்வா வளையத்துக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறதோ என்று சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். ``சாய்பாபா எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவருடைய புகழை அது பாதிக்காது. அனைத்து சாதி, மதத்தவர்களும் சாய்பாபா கோவிலுக்குச் செல்கின்றனர். `எல்லோருக்கும் ஒரே இறைவன்' என்று சாய்பாபா கூறியுள்ளார். அவருடைய போதனைகளுக்கு எதிரான எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்'' என்று சௌத்ரி கூறினார்.
இதற்கிடையில், சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை, பக்தர்களை பாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் கூறியுள்ளார். ``சாய்பாபாவின் பிறப்பிடம் பற்றி சர்ச்சை எதுவும் தேவையற்றது. சாய்பாபா எல்லோருக்கும் உரியவர். அனைத்து இடங்களிலும் இருப்பவர். எனவே இந்த சர்ச்சையை பெரிதாக்கக் கூடாது. இந்த சர்ச்சைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தீர்வு காண்பார். திங்கள்கிழமை ஒரு கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்'' என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சாகன் பூஜ்பால் கூறியுள்ளா