உலகின் மிகப்பெரிய ஆயுதம்
11 Jun,2019
இந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் என்று நாம் அறிவோம். இந்திய அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிற்கு சாணக்கியரின் பங்களிப்பு என்பது மிகவும் அளப்பரியதாகும். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இந்தியாவின் மிகவும் முக்கிமான நூல்களாகும்.
சாணக்கியரின் கருத்துக்களும், அறிவுரைகளும் எக்காலத்துக்கும் பொருந்த கூடியதாகும். வாழ்க்கையில் அனைத்து தருணங்களுக்கும் தேவையான அறிவுரையை சாணக்கியர் தன் ஞானத்தின் மூலம் கூறியுள்ளார். இந்த பதிவில் சாணக்கியர் கூறிய முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தத்துவம் 1
மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான அனைத்தையும் உங்கள் தவறுகளில் இருந்து மட்டும் எப்பொழுதும் கற்றுக்கொள்ள முடியாது.
தத்துவம் 2
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவர் எப்பொழுதும் அதிக நேர்மையாக இருக்கக்கூடாது. ஏனெனில் நேரான மரங்கள்தான் முதலில் வெட்டப்படும். வளைந்து வளர்ந்த மரங்களே நீண்ட காலம் வாழும்.
தத்துவம் 3
பாம்பு விஷம் இல்லாததாக இருந்தாலும் அது விஷம் உள்ள நாகம் போலத்தான் நடிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அதனை கண்டு பயப்படுவார்கள். இது பாம்பிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.
தத்துவம் 4
அனைத்து நட்பிற்கு பின்னாலும் ஒரு சுயநலம் கண்டிப்பாக இருக்கும். எங்கள் நட்பில் எந்த சுயநலமும் இல்லை என்று ஒருவர் கூறினால் அது நிச்சயமாக பொய்யாகத்தான் இருக்கும்.
தத்துவம் 5
ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா?. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.
தத்துவம் 6
சாணக்கியரை பொறுத்தவரை இந்த உலகின் மிகப்பெரிய ஆயுதம் என்றால் அது பெண்ணின் இளமையும், அழகும் தான். இது இரண்டும் எவரையும் எதையும் செய்ய வைத்துவிடும்.
தத்துவம் 7
ஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர்.
தத்துவம் 8
ஒரு அழகிய மலரின் நறுமணம் என்பது எப்பொழுதும் காற்று வீசும் திசையில்தான் பரவும். ஆனால் ஒருவரின் நல்ல குணமானது அனைத்து திசைகளிலும் பரவக்கூடும்.
தத்துவம் 9
உங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது.
தத்துவம் 10
உங்கள் குழந்தை பிறந்த மமுதல் ஐந்து வருடம் செல்லமாக வளர்க்கவும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை திட்டவும். பதின்ம வயதை நெருங்கும் போது அவர்களை நண்பர்களாக நடத்தவும். உங்களின் வளர்ந்த குழந்தைகள்தான் உங்களுக்கு எப்பொழுதும் சிறந்த நண்பர்கள்.
தத்துவம் 11
கல்விதான் ஒருவரின் சிறந்த நண்பன். கல்வி கற்ற ஒருவர் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படுவார். கல்வி அழகு, இளமை இரண்டையுமே தோற்கடிக்க கூடியதாகும்.