ஒரு பைபிள்கூடத் தீயில் கருகவில்லை!’ – அதிர்ந்துபோன தீயணைப்புத்துறை
06 Mar,2019
வர்ஜீனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு அதிசயக் காட்சியைப் பார்த்து ஸ்தம்பித்துப்போய் நின்றனர்.
மேற்கு வர்ஜீனியாவில் உள்ள கிராண்ட்வியூ பகுதியில் ஃப்ரீடம் மினிஸ்ட்ரீஸ் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு கடந்த மார்ச் 3-ம் தேதி நள்ளிரவு மின்சாரக் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
நள்ளிரவு என்பதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கட்டடம் முழுவதும் தீபரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், அவர்களால் கட்டடத்தின் உள் நுழைய முடியவில்லை.
தீயின் தீவிரம் குறைந்ததும் ஆலயத்தினுள் நுழைந்து தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
ஆலயத்தினுள் இருந்த ஒரு பைபிள்கூடத் தீயில் கருகிப் போகவில்லை. சிலுவைகளும் தீயில் கருகவில்லை.
இந்தச் சம்பவம்குறித்து புகைப்படங்களுடன் தீயணைப்புத்துறை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. தீயணைப்புத்துறையின் பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நெட்டிசன்ஸ் சிலர் அந்தப் பதிவு நம்பும்படி இல்லை என விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் மற்றும் தீயணைப்பு துறையில் பதிவுக் குறித்து உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்!