திரைக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் ஆப்பிள்பாயாகவே இருக்கிறார் ஸ்ரீகாந்த். தமிழில் சிறிது இடைவெளி விட்டாலும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாகிவிட்டார். தற்போது வெளியாகவிருக்கும் 'சௌகார்பேட்டை' படத்தில் ஸ்ரீகாந்த் மகா மந்திரவாதியாக வந்து ஆறடி உயர அழகான பேய் ராய் லட்சுமியை ஆட்டி வைக்கிறார். 'இந்த வேடத்துக்குப் பிறகு அமானுஷ்யத்தை உணர்ந்தேன்' என்றவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.
'சௌகார்பேட்டை'யில் ஆவியாகவும், மந்திரவாதியாகவும் நடித்ததை எப்படி உணர்ந்தீர்கள்?
ஆவியாகவும் மந்திரவாதியாகவும் நடித்தது வித்தியாசமாக இருந்தது. சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு மத்தியில் பூஜை செய்யும் காட்சிகளில் நடித்த போது ஒரு கொடுமைக்கார மந்திரவாதி போல மாற்றப்பட்டேன். உடலெங்கும் 100 வாட்ஸ் மின்சாரம் ஏறியது போல் ஜிவ்வென்று இருந்தேன். அதே போல் அதே சுடுகாட்டில் 100 ஆவிகளுடன் நானும் ஒரு ஆவியாக ராய்லட்சுமியுடன் ஆடி நடித்தபோது இதுவரை அறியாத ஒருவித புதுவித சக்தி என்னை இயக்கியது.
அமானுஷ்யசக்தி இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்?
நிச்சயமாக. இந்தப் படத்தில் நடிக்கும் வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை. நடித்த பிறகு பல சமயங்களில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்தேன். அமானுஷ்ய உலகம் இருப்பது நூறு சதவிகிதம் உண்மை.
எந்தெந்த இடங்களில் ஆடினீர்கள்?
மூலகொத்தலம் சுடுகாட்டில் நானும் ராய் லட்சுமியும் இரவு 12 மணிக்கு மேல் 50 பேய் வேடம் போட்டவர்களுடன் ஆடினோம். அங்கு எட்டு கேமிராக்களைக் கொண்டு பத்து நாள் இந்தப் பாட்டு, சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. பேய் உக்கிரமாக மாறுவது போன்று ஒரு காட்சியை தாம்பரத்தை அடுத்து ஒரு காட்டு பங்களாவில் இரவு நேரம் படமாக்கினோம். அப்போது எதிர்பாராத ஒரு வௌ்ளை உருவத்தைப் பார்த்து ராய்லட்சுமி மயங்கி விழுந்தார். 30 நிமிடம் ஓய்வு கொடுத்தபின் மீண்டும் படமாக்கினோம்.
சௌகார்பேட்டைக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?
கோடிக் கணக்கில் பணம் புழங்கும் இடம் சென்னை சௌகார்பேட்டை. அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவியைப் பற்றிய கதை. ராய்லட்சுமி பேயாக வருகிறார். அவர் போயாகச் சிரிப்பது நிச்சயம் பயமுறுத்தும். அவரோடு வடிவுக்கரசியும் போயாக நடித்துள்ளார். பேய் பயத்தைப் போக்க, காமெடிக்கு கோவை சரளா, அப்புகுட்டி, சரவணன், பவர் ஸ்டார், நான் கடவுள் ராஜேந்திரன் என் எல்லோரும் காமெடியில் கலக்கி உள்ளனர்.
விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து விட்டீர்கள், அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?
நல்ல கதை அமைந்து எனக்கேற்ற வேடம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்குக் கிடைத்த வேடம் போல அமைந்தால் சந்தோஷம்.
உங்களின் ஃபேவரிட் நாயகி யார்?
பூமிகா, சிநேகா, சோனியா அகர்வால், மீரா ஜாஸ்மின், பார்வதி நடித்திருக்கிறார்கள். ஆனால் ராய் லட்சுமியோடுதான் செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பெர்சனலா பேசலாமா? குழந்தைகள் குடும்பம் பற்றி?
ஆஹில், முதல் குழந்தை எல்.கே.ஜி. படிக்கிறான். அஹாஷா இரண்டாவது குழந்தை யு.கே.ஜி. படிக்கிறாள். நல்ல மனைவி நல்ல குடும்பம்.
நீங்கள் தயாரிக்கும் படத்தை உங்கள் மனைவி இயக்குவாரா?
எனக்கோ என் மனைவிக்கோ படம் இயக்கும் எண்ணம் இல்லை. என் மனைவி காஸ்ட்யூம் டிசைனராகப் பணி புரிகிறார். அவருக்கு அதற்கே நேரம் சரியாக உள்ளது. நல்ல படங்க்ள தயாரிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. எங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நம்பியார்' 'ஓம் சாந்தி ஓம்' படங்கள் வெளியாக உள்ளன.
ஓம் சாந்தி ஓம் பேய் படமா?
இது ஒரு விறுவிறுப்பான ஜோனர் கதை. படம் வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் சூர்யபிரபாகர் அவ்வளவு டெக்னிக்கலாக எடுத்துள்ளார். பின்னணி இசையில் விஜய் எபிநேசர் மிரட்டியிருக்கிறார். த்ரில்லர் படம் இது. 'ஓம் சாந்தி ஓம்', 'சௌகார்பேட்டை' இரண்டும் என் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும்.