சஞ்சய் தத்தின் தண்டனையை குறைக்க மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
23 Oct,2013
சஞ்சய் தத்தின் தண்டனையை குறைக்க மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
1993-ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் குண்டு வெடித்து 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இதை விசாரித்த தடா கோர்ட் அவருக்கு 5 வருட சிறை விதித்தது. அதனையடுத்து புனே ஏர்வாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி உச்ச நீதிமன்றம் மனு செய்து இருந்தார். அதை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்து இருந்தது. இந்நிலையில், புனே ஏர்வாடா சிறையில் இருக்கும் நடிகர் சஞ்சய் தத் சிகிச்சைக்காக 10 நாட்களுக்கு பரோலில் வெளிவர நீதிமன்றத்தில் மனு விண்ணப்பித்தார். பரோல் வழங்கி நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், சஞ்சய் தத்துக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட போது இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டனை வழங்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத், ஜெய்புன்னிசா காசி மற்றும் மேலும் இருவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை ஜனாதிபதி ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவர்களின் தண்டனையை குறைப்பது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும் அந்த கருத்தின் அடிப்படையில் சஞ்சய் தத்தின் தண்டனையை எப்படி குறைக்கலாம் என்று மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்கும் எனவும் மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.