கடந்த ஓராண்டில் மட்டும் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக சுமார் 7.1 கோடி மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
நெருக்கடியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி குறுகிய காலத்திற்குள் சொந்த நாட்டிலேயே வேறு வேறு இடங்களுக்கு குடியேறும் விவரங்களை நார்வே அகதிகள் கவுன்சில்(NRC) மற்றும் IDMC எனப்படும் கண்காணிப்பு மையம் ஆகியவை திரட்டி அறிக்கையாக வெளியிடுகிறது.
அதன்படி, இதுவரை இல்லாத வகையில் 2022இல் அதிகபட்சமான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7.1 கோடி மக்கள் உள்நாட்டிற்குள்ளே குடிபெயர்ந்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
குறிப்பாக, உக்ரைன் போர், பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் ஆகியவை தான் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும் போது 20 சதவீதம் அதிகமாகும். இதுவே, 2021ஆம் ஆண்டு, 6 கோடி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானர்கள் எனவும், அதற்கு முந்தைய ஆண்டு 3.8 கோடி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022இல் ஏற்பட்ட நிலைமை குறித்து நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள IDMC அமைப்பின் தலைவர் அலெஸ்சான்ட்ரா பிலாக், "இந்த எண்ணிக்கை கவலை தருகிறது. எண்ணிக்கை உயர்வுக்கு உக்ரைன் போர் மற்றும் பாகிஸ்தான் வெள்ளம் பாதிப்பு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் உலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள புதிய மோதல்களும் இதற்கு காரணமாக பார்க்கபடுகிறது.
அதேபோல், பசிபிக் அமெரிக்க பிராந்தியத்திலும் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது" என்றார். உக்ரைன் போர் காரணமாக 1.7 கோடி மக்கள் உள்நாட்டு இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் பெருவெள்ளம் காரணமாக 80 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், காங்கோ மற்றும் எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக, 1.65 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ, உக்ரைன், கொலம்பியா, எதியோப்பியா, ஏமன், நைஜீரியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் தான் இந்த பாதிப்பு மிக மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.