சீனாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங் பதவி விலக கோரி வெடித்துள்ள மக்கள் போராட்டம், தலைநகர் பீஜிங் வரை பரவியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவிய தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கிப்போட்டது.
அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில், சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு முக்கிய பங்காற்றும் துறைகளில், ஐந்தில் ஒரு பங்கு முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்குயி என்ற இடத்தில், தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.
அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக உரும்குயி மக்கள் கடந்த 26ல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஷாங்காய் நகரிலும் போராட்டம் பரவியது. இதை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் மக்கள் போராட துவங்கினர்.
அங்குள்ள லியாங்மாஹி ஆற்றின் அருகே திரண்ட மக்கள், அதிபர் ஷீ ஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை காவல்துறை கைது செய்தனர்.
பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலை மாணவர்கள் மற்றும் நான்ஜிங் என்ற இடத்தில் உள்ள பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.