செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை 7,000 கிலோ கழிவுகளை கொண்டு சேர்த்த மனிதன்..ஆய்வில் தகவல்
27 Sep,2022
மனித வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டில் தான் விண்வெளி ஆய்வு என்பது பெரும் பாய்ச்சலை கண்டது. அதுவரை பூமியில் இருந்து வானத்தை கணக்கிட்டு ஆய்வு செய்த மனிதன் கடந்த நூற்றாண்டில் தான் விண்ணுக்கு பயணம் செல்லும் விதமாக விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்யத் தொடங்கினான். இதில் நிலவுக்கு அடுத்தபடியாக மனிதன் செவ்வாய் கிரகத்தின் மீது தான் கண் வைத்திருந்தான். 50 ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்திற்கு தொடர்ச்சியாக விண்திட்டங்களை விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த 50 ஆண்டுகளில் 14 விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் 18 விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளன. 2030க்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா தீவிர முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, மனிதன் இதுவரை கால்வைக்காத செவ்வாய் கிரகத்தில் அதற்குள்ளாகவே கழிவுகளை குவிக்கும் வேலையை செய்ய தொடங்கியுள்ளான். இதை அமெரிக்கா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறார். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கார்கி கிலிக் , மனிதன் மூலம் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7,118.6 கிலோ கழிவு குப்பைகள் சேர்ந்துள்ளது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
விண்வெளி திட்டங்களில் பழுதடைந்த கருவிகள், காலம் முடிந்து விண்கலங்கள், அங்கு மோதி சிதறிய விண்கலப் பகுதிகள் தான் இந்த கழிவு குப்பைகளாக மாறியுள்ளன என ஆராய்ச்சியாளர் கார்கி தெரிவிக்கிறார். அடுத்தடுத்து வரும் விண்வெளி திட்டங்களுக்கு இந்த கழிவுகள் பிரச்சனைகள் வரலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
அன்மை காலமாகவே நாசா அனுப்பும் விண்கலன்கள் செவ்வாய் கிரகத்தில் குப்பைகளை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்புகின்றன. பூமியில் தான் சூழியல் பிரச்னை காரணமாக உயிரினங்கள் வாழ்வது சவாலாக உள்ளது. எனவே, செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தை கொண்டு சேர்ப்பேன் என எலான் மஸ்க் கூறிவருகிறார். ஆனால் அதற்குள்ளாகவே மனிதன் 7,000 கழிவுகளை செவ்வாய்க்கு கொண்டு சேர்த்துவிட்டான் என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர்.