அமெரிக்கா - ரஷ்யா பேச்சு தோல்வி: உக்ரைனில் போர் பதற்றம் நீடிப்பு
23 Jan,2022
ஜெனீவா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பேச்சில் எந்த தீர்வும் எட்டப்படாததால் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.
'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு ஆதரவுஅளித்து வருகின்றன. இதனால் ஆத்திரம்அடைந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதற்றமான சூழலை தணிக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லவ்ரோவ் ஆகியோர் பேச்சு நடத்தினர். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடந்த இந்த பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இது குறித்து அன்டோனி பிளின்கன் கூறியதாவது:பேச்சு பயனுள்ள முறையில் இருந்தது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்கிறது.
அப்படியெனில் உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும்படி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, அடுத்த வாரம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மீண்டும் ரஷ்யா - அமெரிக்கா அதிபர்கள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யலாம் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லவ்ரோவ் கூறுகையில், ''அமெரிக்கா எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்த பிறகே படைகளை வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார். இதன் காரணமாக உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.