தடுப்பூசி செலுத்தாவிட்டால் அரபு நாடுகளில் பயணம் மேற்கொள்ள தடை
03 Jan,2022
-ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு நாட்டிற்குள் எந்த பகுதிக்கும் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட உள்ளது.
உலகம் முழுதும் மரபணு மாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இங்கு 100 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன; 91.50 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே 'பூஸ்டர்' டோஸ் எனப்படும் கூடுதல் டோஸ் செலுத்தும் பணிகளை விரைந்து துவங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் இரண்டு டோஸ்களையும் விரைந்து செலுத்திக்கொள்ள நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி முதல் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு நாட்டிற்குள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.