900 பேரை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ.
06 Dec,2021
விஷால் கார்க் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், பணியாளர்களுக்கு வந்த ஜூம் கால் அழைப்பை, Call From Hell (நரகத்திலிருந்து வந்த அழைப்பு) என்று, கூறியுள்ளன.
ஒரு ஜூம் காலில், பெட்டர்.காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கார்க் (Vishal Garg) 900 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொருட்களை அடமானம் வைத்தல், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் 900 பேருக்கு கடந்த புதன் கிழமையன்று ஜூம் கால் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பெட்டர் டாட் காமின் சி.இ.ஓ. விஷால் கார்க் பேசியுள்ளார். ஊழியர்களிடம் பேசிய விஷால், 'இந்த போன் காலில் நீங்கள் இருந்தால், நீங்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டவர்களில் ஒருவராக இருப்பீர்கள். உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை' என்று கூறி, அழைப்பை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விஷால் கார்க் அளித்துள்ள விளக்கத்தில், 'பொதுவாக நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். கடந்த முறை ஜூம் காலில் பேசி, பணியாளர்களை நீக்கம் செய்தபோது எனக்கு அழுகையே வந்து விட்டது. நான் வேலையில் இருந்து நீக்கியவர்கள் ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்தார்கள். சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் திருடியுள்ளனர். உற்பத்தியின்மை, செயல் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.
விஷால் கார்க் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், பணியாளர்களுக்கு வந்த ஜூம் கால் அழைப்பை, Call From Hell (நரகத்திலிருந்து வந்த அழைப்பு) என்று, கூறியுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னர், ஏராளமான செய்தி ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதால் பெட்டர் டாட் காமும், அதன் நிறுவனர் விஷால் கார்க்கும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள்.