மாயமாகியுள்ளதாக கூறப்படும் சீன வீராங்கனை பெங்கிற்கு ஆதரவாக உலக டென்னிஸ் நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
சீனாவின் முக்கியமான அரசியல் பிரபலம் ஒருவர் மீது சமூக வலைத்தளம் மூலம் பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பிய அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல நாட்டு டென்னிஸ் நட்சத்திரங்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்குபவரும், சீனாவின் முன்னாள் மூத்த துணை அதிபராகவும் இருந்த ஜாங் ஜி ஓர்லி, மீது அந்நாட்டின் டென்னிஸ் நட்சத்திரமும் முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 வீராங்கனையுமான பெங் ஷுவாய் (வயது 35) பகிரங்கமாக செக்ஸ் புகார் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி தன்னை பல ஆண்டுகளாக பலவந்தப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகவும், அடிபணிய வைத்து தன்னுடன் பல ஆண்டுகளாக அவர் இந்த கொடுமையை செய்து வந்ததாகவும் சமூக வலைத்தளமான வெய்போ மூலம் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் கூறியிருக்கிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த பதவியான 7 பேர் மட்டுமே கொண்ட பொலிட் பீரோ உறுப்பினர் குழுவில் இடம்பிடித்தவர் ஜாங் ஜி ஓர்லி, அவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை டென்னிஸ் வீராங்கனை வைத்ததை பார்த்த நெட்டிசன்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அந்த பதிவு சிறிது நேரத்திற்குள்ளாகவே அழிக்கப்பட்டிருந்தது.
ஸ்கிரீன்ஷாட்கள் அடிப்படையில், டென்னிஸ் நட்சத்திரம் கூறியிருந்தது, “ஆரம்பத்தில் நான் முடியாது என கூறினேன். ஆனாலும் அவர் பலவந்தப்படுத்தினார். நான் அழுதேன். என்னை அடிபணியவைத்து பல ஆண்டுகள் இந்த உறவை அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஜாங் ஜி ஓர்லியின் மனைவிக்கு இது தெரியும். 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை என்னிடம் தகாத முறையில் நடப்பதை ஜாங் ஜி ஓர்லி தொடர்ந்து கொண்டிருந்தார். சமீபத்தில் அவராகவே என்னிடம் பேசுவதை நிறுத்தும் வரையில் அது தொடர்ந்து கொண்டிருந்தது என பெங் ஷுவாய் கூறியிருக்கிறார்.
இந்தப் பதிவு வெளியான பின்னர் டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய்-க்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர் தொலைத் தொடர்பு அற்ற நிலையில் இருந்து வருவதால் அவருக்கு என்ன ஆனது என கவலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங் ஷுவாய் உலக டென்னிஸ் அசோசியேஷனுக்கு எழுதியதாக இ-மெயில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில் தான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், தான் வீட்டில் ஓய்வில் இருந்து வருவதாகவும் அதில் பெங் ஷூவாய் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த இ-மெயில் விவகாரம் நம்பும்படியில்லை எனவும் அடக்குமுறைக்கு பெயர் போன சீனாவில், உயர் பதவியில் இருந்தவர் குறித்து மீடூ புகார் தெரிவித்ததால் விளையாட்டு வீராங்கனைக்கு ஏதாவது நேர்ந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து பெங்கிற்கு ஆதரவாக உலக டென்னிஸ் நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், பெங் குறித்து வெளியாகும் தகவல்கள் கவலைக்குரியதாக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதே போல ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஜோகோவிக் போன்றோரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.