இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் மே 14-ந் தேதி வரை ரத்து - அமீரக விமான நிறுவனங்கள் அறிவிப்பு
30 Apr,2021
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வருகை புரியும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கூட்டாக அறிவித்தது.
இதில் ஏற்கனவே அறிவித்திருந்த 10 நாட்கள் தடையானது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமீரக விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளன. அதில், மே 5-ந் தேதி வரை இருந்த தடை அறிவிப்பு மேலும் 14-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து நாடு கொரோனா அச்சத்தில் இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து தடை விதித்தது. அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் ஓமன் மற்றும் சவுதி அரேபியா காலவரையற்று இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தகக்து.
துபாயில் எமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு முன்பதிவு செய்துள்ள தேதிகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.