பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கும் – நம்பிக்கை வெளியிட்டது ஈரான்!
21 Feb,2021
பொருளாதாரத் தடைகள் விரைவில் அமெரிக்கா நீக்கும் என நம்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அணுஆயுத சோதனை மோதலில் தங்கள் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஒரு பக்கம் கோரியிருக்க, எங்களது நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் ,“அமெரிக்கா எங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விரைவில் நீக்கும் என்று நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார் எனவும், ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம் எனவும் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.
இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015இல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.