2032 இல் பெற்றோல், டீசல் கார்களுக்குத் தடைவிதிக்கப்படும்
13 Feb,2020
பெற்றோல், டீசல் மற்றும் ஹைபிறிற் கார்களின் விற்பனைக்கான தடை இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார்.
2035 முதல் 2040 வரையிலான காலப் பகுதிக்குள் கார்பன் உமிழ்வு அற்ற இலக்குகளை எட்டும் முயற்சி குறித்து அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இது குறித்து பிபிசி வானொலி 5 நிகழ்ச்சியில் அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் தெரிவிக்கையில்; 2035 க்குள் அல்லது 2032 இல் கூட நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
நொவெம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக அரசாங்கம் தனது திட்டங்களை வகுத்து வருகிறது.
COP26 என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு கிளாஸ்கோவில் நடத்தப்படவுள்ளது.
2035 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக பெற்றோல், டீசல் மற்றும் ஹைபிறிற் கார்களுக்கான தடை கொண்டுவரப்படும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தார்.
போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; பெற்றோல், டீசல் மற்றும் வான்களின் விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய சாத்தியமான காலம் குறித்து நாம் ஆலோசித்துவருகிறோம் என்று குறிப்பிட்டார்.