தாய்வானிலிருந்து நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தல்
05 Jun,2019
தாய்வானிலிருந்து 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், தாய்வானிலிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 268 சட்டவிரோத குடியேறிகள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தாய்வான் தேசிய குடிவரவு முகாமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் இந்தோனேசியா, வியாட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள அனைவரும் மே 1 முதல் 31 வரையிலான காலப்பகுதியில் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், அண்மையில் அறிவிக்கப்பட்ட மன்னிப்புத் திட்டத்தின் கீழ் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் ஈகைப் பெருநாளுக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் முதல் நாடுகடத்தல் பணியை தீவிரப்படுத்தியதாக குடிவரவு முகாமை தெரிவித்துள்ளது.
அத்துடன், வரும் ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் மன்னிப்பு திட்டத்தின் கீழ் வெளியேறுபவர்கள், அதிகபட்சமாக 63 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 10,500) அபராதமாக் செலுத்த வேண்டுமெனவும், தாய்வானுக்குள் மீண்டும் நுழைவதற்கு விதிக்கப்படும் தடைக்கான காலத்தின் அளவும் குறைக்கப்படும் என்றும், தாய்வானில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முகாமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மன்னிப்பு காலம் நிறைவடைந்த பின்னர் வெளியேற்றப்படுகிறவர்களுக்கு அபராதம் ஐந்து மடங்காகவும், மீண்டும் தாய்வானுக்குள் நுழைவதற்கு நீண்டகாலத் தடையும் விதிக்கப்படும் என குடிவரவு முகாமை எச்சரிக்கை விடுத்துள்ளது.