246 கொக்கேன் சிறு பொதிகளை விழுங்கி கடத்தியவர் விமானத்தில் உயிரிழப்பு!
29 May,2019
போதைப் பொருட்களை சூட்சுமமான முறையில் கடத்த முற்பட்டு உயிரை பணயம் வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில், உயிரைப் பணயம் வைத்து 246 கொக்கேன் போதைப்பொருள் அடங்கிய சிறு பொதிகளை விழுங்கி குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்ற பயணிகள் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
குறித்த விமானத்தில் 99 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் மெக்சிகோவின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு எனப்படும் நரம்பியல் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக விமானத்தை ஹெர்மோசில்லோ விமான நிலையத்தில் தரையிறக்கினர். அங்கு தயாராக இருந்த மருத்துவரகள் பயணியை பரிசோதனை செய்தனர். இதன்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் 246 கோகைன் போதைப் பொருட்கள் அடங்கிய சிறு பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
ஜப்பானுக்கு கடத்துவதற்காக அளவுக்கு அதிகமாக கோகைன் பொதிகளை அவர் விழுங்கியிருக்கிறார். அவற்றில் சில பொதிகள் பிரிந்து, இரத்தத்தில் போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.
மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல்கள் பரவலாக கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.