வளைகுடாவில் பலமுனை மோதல்களை மூளவைக்கும் ஈரானுக்கெதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை
24 May,2019
அமெரிக்காவின் பெருஞ்செலவிலான போர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திரும்பத்திரும்ப பேசிவந்திருக்கிறார்.
உதாரணமாக, 2003 ஈராக் போர் அமெரிக்கா எக்காலத்திலுமே செய்திராத மிக மோசமான தவறு என்று கடந்த வருடம் அவர் வர்ணித்தார்.
அமெரிக்கத் துருப்புக்களை நாட்டுக்கு திருப்பியழைப்பதாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது அவர் உறுதியளித்தார்.
ஆனால், அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டரை வருட காலத்துக்குள்ளாக மேற்காசியாவில் இன்னொரு பெரிய போரின் விளிம்பில் (இத்தடவை ஈரானுக்கு எதிராக) அமெரிக்கா நிற்கிறது.
பிராந்தியத்தில் உள்ள தனது நலன்கள் மீதும் நேச நாடுகளின் நலன்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா ஏற்கெனவே வளைகுடாவுக்கு விமானம் தாங்கிக்கப்பல் அணியொன்றையும் குண்டுவீச்சு விமானத் தொகுதியொன்றையும் அனுப்பிவைத்திருக்கிறது.
இதை ஈரானிய ஆட்சிக்கு அனுப்பப்பட்ட தெட்டத்தெளிவான செய்தி என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் வர்ணித்திருந்தார். “ஈரானுடன் அமெரிக்கா போருக்குப் போகுமா என்று கேட்கப்பட்டபோது இல்லை என்று நம்புகிறேன் ” என்று ஜனாதிபதி ட்ரம்ப் பதிலளித்தார்.
ஆனால், வாஷிங்டனிலும் மேற்காசியாவிலும் போருக்கான ஆரவாரம் அதிகரிப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
அமெரிக்காவின் ஈரான் கொள்கையை தற்போது வழிநடத்துகின்ற பொல்டன் ஈரான் விவகாரங்களில் கடும்போக்கைக் கடைப்பிடிப்பதில் பிரபலமானவர். தெஹ்ரானில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்ப கூறிவந்திருக்கிறார்.
தற்போதைய கொந்தளிப்பு நிலைக்கு வழிவகுத்த புலனாய்வுத் தகவல்களை இஸ்ரேல் நாடு தான் வழங்கியது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் சகோதரரான துர்கி பின் சல்மானுக்கு சொந்தமான பத்திரிகையொன்று ஈரான் மீது “துல்லியத் தாக்குதல்” (ளுரசபiஉயட ளுவசமைநள) நடத்தப்படவேண்டும் என்று கடந்த வாரம் ஆசிரிய தலையங்கம் தீட்டியிருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கரையோரமாக நான்கு எண்ணெய்க்கப்பல்கள் மீதான மர்மத்துக்கிடமான தாக்குதலும் சவூதியின் எண்ணெய்க்குழாய் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலும் (இத்தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என்று யேமனில் உள்ள ஈரானிய ஆதரவுடனான ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உரிமைகோரினர்) நெருக்கடியை மேலும் மோசமாக்கியது.
வெறுமனே ஒரு சிறு பொறி கூட முழு அளவிலான மோதலொன்றை மூளவைத்துவிடக்கூடிய அளவுக்கு வளைகுடாவில் நிலைவரம் ஆபத்தானதாக இருக்கிறது.
நெறிமுறைத்தவறு
அமெரிக்கா கடந்த காலத்தில் செய்த தலையீடுகளில் இருந்து மீண்டுவருவதற்கு இன்னமும் கூட கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு பிராந்தியத்தில் இன்னொரு போருக்குச் செல்லுமேயானால், அது நெறிமுறை ரீதியில் பெருந்தீங்கைக் கொண்டுவரக்கூடியதாகவும் மூலோபாய நோக்கில் கேலிக்கிடமானதாகவும் அமையும். முதலாவதாக, ஈரானை அமெரிக்கா இவ்வாறாக நடத்தவேண்டியதில்லை.
தடைவிதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு கைமாறாக ஈரான் அதன் அணுத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு 2015ஆம் ஆண்டில் சர்வதேச உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது.
அந்த உடன்படிக்கையை முறையாக கடைப்பிடித்தும் வந்தது. அமெரிக்கா மீண்டும் விதித்த தடைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து இந்த மாதம் தான் அந்த சர்வதேச உடன்படிக்கையின் கடப்பாடுகள் சிலவற்றை இடைநிறுத்துவதாக ஈரான் அறிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.
உடன்படிக்கையில் இருந்து கடந்த வருடம் வெளியேறியதுடன் ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்ததன் மூலமாக உடன்படிக்கையை முதலில் ஜனாதிபதி ட்ரம்ப் தான் மீறினார். உடன்படிக்கையை முறையாகக் கடைப்பிடித்த ஈரானின் செயல் அமைதியான உலகொன்றிலே மதித்துப்பாராட்டப்பட்டிருக்கும்.
அத்துடன் உடன்படிக்கையின் விளைவாகக் கிடைக்கக்கூடியவை என்று உறுதியளிக்கப்பட்ட பயன்களை அறுவடைசெய்யவும் அந்த நாடு அனுமதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு பதிலாக ட்ரம்ப் நிருவாகமோ ஈரானைத் தண்டித்ததையே உலகம் கண்டது.
இரண்டாவதாக, அமெரிக்கா போருக்கு போகுமேயானால், அது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகவே இருக்கும். இராணுவ நடவடிக்கையை ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்துவருவதால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அதற்கு அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை.
ஈராக் போரை ஆதரித்த ஐக்கிய இராச்சியம் உட்பட அமெரிக்காவின் ஐரோப்பிய நேச நாடுகளும் கூட ஈரான் அணு உடன்படிக்கை மீது தொடர்ந்தும் பற்றுதியைக் கொண்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சவூதி அரேபியாவினதும் இஸ்ரேலினதும் ஆதரவை அமெரிக்கா பெறக்கூடும், ஆனால் முழு அளவிலான போரொன்றுக்குள் தாங்கள் இழுக்கப்படுவதை அவ்விரு நாடுகளும் கூட விரும்புமா என்பது நிச்சயமில்லை.
ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கையொன்று சர்வதேச நிறுவனங்களை மேலும் பலவீனப்படுத்தி அத்திலாந்திக் கூட்டணிக்குள் (நேட்டோ) மேலும் விரிசல்களை தோற்றுவிக்கும்.
மூன்றாவதாக, ஈரான் ஒரு ஈராக் அல்ல. அது ஒரு லிபியாவும் அல்ல. ஒரு தசாப்த காலமாக கடுமையான தடைகளை விதித்து ஈராக்கின் இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் முடமாக்கிய பின்னரே அமெரிக்கா அந்த நாட்டுக்குள் படையெடுத்தது.
ஈராக் முற்றுமுழுதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. முதலாவது வளைகுடா போருக்குப் பிறகு அரபு நாடுகள் பாக்தாதிற்கு எதிராக திரும்பியிருந்தன.
ஈரான் அதன் எதிரி ரஷ்யாவும் சண்டைக்குள் செல்லாமல் ஒதுங்கும் மனோநிலையிலேயே இருந்தன. அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அவற்றின் நேச நாடுகளும் ஈராக்கிற்கு அணிவகுத்துச்சென்று ஒரு சில வாரங்களுக்குள் சதாம் ஹுசெய்ன் ஆட்சியைத் தூக்கியெறிந்தன.
மறுபுறத்தில், ஈரான் நிரந்தரமாக பாதுகாப்பு உணர்ச்சியற்ற ஒரு நிலையில் வாழ்கின்ற ஒரு நாடாகும். எப்போதுமே போர் தயார் நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.
ஈரானிடம் பலம்பொருந்திய பாரம்பரிய இராணுவம் ஒன்று இல்லை என்பதுடன் தடைவிதிப்புகளினால் நாடு முடங்கிப்போயிருக்கும் அதேவேளை தங்களுக்கு இருக்கக்கூடிய சவால்களை ஈரானின் கொள்கை வகுப்பாளர்கள் நன்கறிவார்கள்.
அதன் காரணத்தினால்தான் அவர்கள் திரட்டல் படைகளின் ஊடாக (சூடிn – ளவயவந அடைவையை பசடிரயீள) மேற்காசியா பூராவும் ஈரானிய செல்வாக்கை விஸ்தரிக்கும் முன்னரங்க பாதுகாப்பு கோட்பாடொன்றைக் (குடிசறயசன னுநகநnஉந னுடிஉவசiநே ) கடைப்பிடிக்கிறார்கள்.
ஈரானுக்கு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தவர்கள் இருக்கிறார்கள். ஈராக்கிலும் சிரியாவிலும் ஷியா முஸ்லிம் திரட்டல் படைகளும் யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் காசாவில் இஸ்லாமிய ஜிஹாத்தும் இருக்கின்றன.
போரொன்று மூளும் பட்சத்தில் இந்த குழுக்களை செயலில் இறக்குவதன் மூலம் பல்முனை மோதல்களை மூளவைத்து ஏனைய பல நாடுகளை போருக்குள் இழுத்துவிட ஈரானால் முடியும். இத்தகையதொரு சாத்தியப்பாடு ஈரான் மீதான “மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலைக் கூட” (ஹ டiஅவைநன ளவசமைந) ஆபத்துமிகுந்ததாக்கிவிடும்.
இது தவிர, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரானால் தடுக்கமுடியும்.பாரசீக வளைகுடாவுக்கும் ஓமான் வளைகுடாவுக்கும் இடையில் இருக்கும் ஹோர்முஸ் நீரிணையின் ஊடாகவே உலகின் திரவ இயற்கைவாயுவின் மூன்றில் ஒரு பகுதியும் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதமும் கொண்டுசெல்லப்படுகின்றன.
அவ்வாறு அந்த நீரிணையை தடுக்கும் கடுமைவாய்ந்த நடவடிக்கையில் ஈரான் இறங்குமானால், அமெரிக்காவிடமிருந்து வரக்கூடிய பதிலடியும் மிகப்பாரியதாக இருக்கக்கூடும். எவ்வாறென்றாலும் போர் என்பது கடுமைவாய்ந்த ஒரு நடவடிக்கையே. அது தீவிரமான பதிலடியைத்தூண்டிவிடக்கூடும்.
நான்காவதாக, அமெரிக்காவின் கடந்த காலப் போர் வரலாறு அடிக்கடி கூறப்படுவதைப் போன்று ஒன்றும் பிரமாதமானதல்ல.
அமெரிக்கா உலகின் ஒப்புயர்வற்ற இராணுவ வல்லரசாக (யீசந நஅiநேவே அடைவையசல யீடிறநச) இருக்கிறதென்றால் அதற்கு அது ஈடுபட்ட போர்களின் விளைவுகள் அல்ல, அதன் இராணுவ வல்லமையே காரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டு வெளியேறுவதற்கு வழியைக் காண்பதற்காக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் அது வளைகுடாவில் பதற்றநிலையைத் தீவிரப்படுத்துவது விசித்திரமானதாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கியபோது உலகில் உள்ள ஒவ்வொரு பயங்கரவாதிக்குப் பின்னாலும் தொடர்ந்து சென்று அழிக்கப்போவதாக அமெரிக்கா சூளுரைத்தது.
17 வருடங்களுக்குப் பிறகு இன்று அல் – கைதா இன்னும் உயிரோடு இருக்கிறது. இஸ்லாமிய அரசும் (ஐ.எஸ்.) வேறு பயங்கரவாத இயக்கங்களும் உலகம் பூராவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அரைவாசிக்கும் அதிகமான பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஈராக்கில் சதாம் ஹுசெய்னின் ஆட்சியை சுலபமாக வீழ்த்த அமெரிக்காவினால் இயலுமாக இருந்தது, ஆனால் சதாமுக்கு பின்னரான அமைதியின்மையை அடக்க அது தவறிவிட்டது.
மதப்பிரிவுகளுக்கிடையிலான உள்நாட்டுப்போருக்குள் அந்த நாடு மூழ்கியது. ஈராக்கின் குழப்பநிலையில் இருந்துதான் இஸ்லாமிய அரசு இயக்கம் தோன்றியது.
லிபியாவில் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் கூட்டணி (குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம்) 2011 ஆம் ஆண்டில் தலையிட்டபோது கேணல் மும்மர் கடாபியின் சர்வாதிகாரத்தில் இருந்து அந்த நாட்டை விடுவிப்பதே நோக்கம் என்று உறுதியளிக்கப்பட்டது. கடாபி கொல்லப்பட்டார்.ஆனால் நாடு குழப்பத்தில் ஆழ்ந்தது. இன்னமும் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை.
சிரியாவில் அமெரிக்கா மறைமுகமான தலையீடொன்றைச் செய்து ஜனாதிபதி பஷார் அல் – அசாத் பதவி கவிழ்க்கப்படவேண்டும் என்று கோரியது.
ஆனால், ரஷ்யர்கள் இராணுவ தலையீட்டைச் செய்யத்தொடங்கியதும் அமெரிக்காவினால் சிரியாவில் பெரிதாக ஒன்றையும் செய்யமுடியாமல் போய்விட்டது.
இந்த நாடுகளில் எல்லாம் அமெரிக்காவினால் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளமுடியவில்லை. விரும்பிய விளைவுகளைப் பெற அமெரிக்கா தவறியது. ஈரான் மாத்திரம் எவ்வாறு வேறுபட்டதாக இருக்கும்?
இராஜதந்திரத்தை பயன்படுத்துதல்
ஈரானிடமிருந்து வரக்கூடிய சவால்களையெல்லாம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நன்கு விளங்கிக்கொண்டார் போலும். அதன் காரணத்தினால்தான் இராஜதந்திர வழிவகைகளின் மூலமாக ஈரானின் அணுத்திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அவர் முயற்சித்தார்.
ட்ரம்ப் வெள்ளைமாளிகைக்கு வந்து சீர்குலைக்கும் வரை அதில் ஒபாமா. வெற்றியும் கண்டார். ஈரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்ரம்ப் கூறுகிறார், ஆனால் அதைச் செய்வதற்கான யதார்த்தபூர்வமான திட்டம் எதுவும் அவரிடம் கிடையாது.
பேச்சுவார்த்தையே அவரது பிரதான நோக்கமாக இருந்திருந்தால் அணு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கக்கூடாது.
உடன்படிக்கையினால் தோற்றுவிக்கப்பட்டிருந்த சுமுகமான சூழ்நிலையை உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் பிராந்தியத்தில் ஈரானின் முனைப்பான நடவடிக்கைகளினால் வாஷிங்டனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அக்கறைகளை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தியிருக்கவேண்டும்.
நிகழ்வுப்போக்குகளை மாற்றுவதற்கு உண்மையாகவே அமெரிக்க ஜனாதிபதி விரும்புகிறார் என்றால், பதற்ற நிலையைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை அவர் தொடங்கவேண்டும்.அத்துடன் போர் நாட்டமுள்ள தனது ஆலோசகர்களை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்