இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்துகின்றது சிரியா- அமெரிக்கா கடும் எச்சரிக்கை
23 May,2019
சிரிய அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியானால் அமெரிக்காவும் அதன் சகாக்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடமேற்கு பகுதியில் அரச படையினர் குளோரின் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
அசாத் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்பதற்கான துரதிஸ்டவசமான அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்கட்டஸ் தெரிவித்துள்ளார்.
மே 19 ம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இது குறித்த தகவல்களை திரட்டி வருகின்றோம்,ஆனால் சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் உடனடிநடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை மீண்டும் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிரியா மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என பென்டகனும் எச்சரிக்கை விடுத்துள்ளது