160 அடி உயரத்தில் அயர்ந்த தூக்கம் – சீனக் கூலித் தொழிலாளர்களின் நிலையைப் பிரதிபலிக்கும் வீடியோ
16 Apr,2019
சீனாவில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 160 அடி உயரத்தில் நின்றபடி தூங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சீன தொழிலாளர்கள்
அன்றாடம் கூலி அல்லது கட்டடங்கள் கட்டும் பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலைதான் உலகிலேயே மிகவும் கடினமான வேலை.
ஒரு நாளுக்குக் குறைந்தது 10 மணி நேரமாவது அவர்கள் தங்களின் உடலை வற்புறுத்தி வேலை செய்யவேண்டும். அதே போல் அந்தத் தொழிலாளர்களுக்குத்தான் அதிக களைப்பும் அதிக காயங்களும் ஏற்படும். கட்டுமான தொழிலாளர்கள் சார்ந்த வீடியோ ஒன்று பார்ப்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தாலும் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தைக் கலக்கி வருகிறது.
சீன தொழிலாளர்கள்
சீனாவில் மின் கோபுரங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சுமார் 160 அடி உயரத்தில் நின்றபடியே தூங்கும் வீடியோதான் அது. அதில் தொழிலாளர்கள் தங்களின் கை, கால் மற்றும் உடலை மின் கோபுரக் கம்பிகளில் கட்டிவிட்டு நின்றபடியும், தொங்கியபடியும் ஓய்வெடுக்கிறார்கள். அவர்கள் உணவு உண்ணும் போது மட்டுமே கோபுரங்களிலிருந்து இறங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
இதற்கு சில ட்விட்டர் வாசிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். அதில், `அந்த உயரத்தை வீடியோவில் பார்க்கும் போதே மிகவும் பயமாக உள்ளது.
அங்கு வேலை செய்ய எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் அளித்தாலும் நான் செல்ல மாட்டேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், `அவ்வளவு உயரத்தில் நிம்மதியான உங்கள் தூக்கத்தைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.